தீபத் திருவிழாவிற்கு திருவண்ணாமலைக்கு போறீங்களா? அதிர வைக்கும் விடுதி கட்டணம்

திருவண்ணாமலையில் ஒரு நாள் இரவுக்கு 30,000 வாடகை, அதிர வைக்கும் விடுதி கட்டணத்தால் வெளிமாநில பக்தர்கள் அதிர்ச்சி

Update: 2023-11-14 12:50 GMT

அருணாசலேஸ்வரர் கோயில் பைல் படம்

பஞ்சபூத தலங்களில் ‘அக்னி’ தலமாகவும்,, நினைத்தாலே முக்தி தரும் திருத்தலம், ஞான தபோதனரை வா வென்று அழைக்கும் மலை அண்ணாமலை, சைவத்தின் தலைநகரம் என பல சிறப்புகள் பெற்றது திருவண்ணாமலை.

ஒவ்வொரு ஆண்டும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும். இந்த நிலையில் இந்த ஆண்டு கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

இவ்வாண்டிற்கான கார்த்திகை தீபத் திருவிழா வரும் 17 ஆம் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதனைத் தொடர்ந்து பத்து நாட்கள் தீபத் திருவிழா நடைபெறும்.

20 ம் தேதி வெள்ளி கற்பகவிருட்சம், வெள்ளி காமதேனு வாகனத்தில் உண்ணாமலை அம்மையுடன், அண்ணாமலையார் உலா வந்து அருள்பாலிப்பார்.

21 ம் தேதி வெள்ளி ரிஷப வாகனத்திலும், 22 ம் தேதி   காலை 63 நாயன்மார்கள் உற்சவம் மற்றும் இரவு வெள்ளி ரதத்திலும் சுவாமி அம்பாளுடன் எழுந்தருளி திருவீதி உலா நடைபெற உள்ளது.

23 ம் தேதி 7-ம் நாளில் ‘மகா தேரோட்டம்’ நடைபெறும்

கார்த்திகை தீப திருவிழாவின் முக்கிய நிகழ்வாக ‘மலையே மகேசன்’ என போற்றப்படும் 2,668 அடி உயரமுள்ள அண்ணாமலையின் உச்சியில் வரும் நவம்பர் 26-ம்தேதி மாலை 6 மணிக்கு மகாதீபம் ஏற்றப்படும். ஜோதி வடிவில் அண்ணாமலையார் காட்சி கொடுப்பார். வருடத்திற்கு ஒருமுறை குறிப்பிட்ட சில நிமிடங்கள் மட்டுமே காட்சி தருகின்ற அர்த்தநாரீஸ்வரர் , தீப மண்டபத்திற்கு எழுந்தருளி காட்சி தருவார்.

10 நாட்கள் நடைபெறும் தீபத்திருவிழாவை காண தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்தும், ஆந்திரா, தெலங்கானா, கேரளா, புதுச்சேரி, கர்நாடகா உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகின்றனர். அவ்வாறு வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்கள் பலர் திருவண்ணாமலையில் உள்ள தனியார் தங்கும் விடுதிகளில் அறைகளை வாடகைக்கு எடுத்து தங்குவது வழக்கம்.

இந்த விடுதிகளில் சாதாரண நாட்களில் அறைகளில் உள்ள வசதிகளுக்கு ஏற்ப ரூ.1000 முதல் ரூ.3000 வரை வாடகை வசூலிக்கப்படும். இதற்காக பக்தர்கள் முன்கூட்டியே ஆன்லைன் மூலம் புக்கிங் செய்து விடுகின்றனர். தற்போது தீபத்திருவிழா நெருங்கி விட்டதால் விடுதிகளில் அறைகள் ஆன்லைன் மூலம் புக்கிங் செய்யப்பட்டு வருகிறது. தங்கும் அறைகளுக்கு கடும்போட்டி நிலவுவதால் வாடகையும் 3 முதல் 4 மடங்கு அதிகரித்துள்ளதை பார்த்து பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

வெளிமாநிலங்களில் இருந்து வரும் பக்தர்களிடம் 30 ஆயிரம் ரூபாய் வரை வசூல் செய்வதாக விடுதிகள் மீது பக்தர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

இதனால் வெளியூரில் இருந்து வரும் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். திருவண்ணாமலையில் அண்ணாமலையார் கோயில் நிர்வாகம் சார்பில் தங்கும்  விடுதிகள் இல்லை. சுற்றுலா துறை சார்பில் யாத்ரி நிவாஸ் விடுதி மட்டும் உள்ளது. இந்த விடுதியிலும், தீபத்திருவிழா ஏற்பாடுகளுக்காக அண்ணாமலையார் கோயிலுக்கு வரும் அதிகாரிகள் தங்குகின்றனர்.

தனியார் தங்கும் விடுதிகளும் குறைவான அளவே உள்ளதால் தீபத்திருவிழாவின்போது அறைகள் கிடைக்காமல் வெளியூர் பக்தர்கள் அவதிக்குள்ளாகின்றனர்.

மேலும் திருவண்ணாமலையில் மாடவீதியில் பல இனத்தைச் சார்ந்தவர்கள், குறிப்பாக தென் தமிழகத்தை சேர்ந்தவர்கள், தீபத் திருவிழாவை கண்டு தரிசிப்பதற்காக பல மடங்களை கட்டி வைத்துள்ளனர். அங்கு வெளி நபர்களுக்கு  தங்கும் அறைகள் வழங்குவதில்லை.

எனவே பக்தர்களின் வசதிக்காக இந்துஅறநிலையத்துறை சார்பில் தங்கும் விடுதிகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் , விடுதிகளை தீபத் திருவிழா மற்றும் பௌர்ணமி நாட்களில் கண்காணிக்க வேண்டும்.   தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் தலையிட்டு கட்டணங்களை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

Similar News