ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட 375 சேலைகள் பறிமுதல்
திருவண்ணாமலையில் ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட 375 சேலைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி திருவண்ணாமலை நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பறக்கும்படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று இரவு துணை தாசில்தார் (தேர்தல்) மோகன் தலைமையிலான குழுவினர் ஏந்தல் கூட்ரோடு பகுதியில், வாகனச்சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி அவர்கள் சோதனை செய்ததில் உரிய ஆவணங்கள் இல்லாமல் 375 சேலைகள் கொண்டு செல்வது தெரியவந்தது. மேலும் அவற்றை வேட்டவலம் அருகில் உள்ள ஆங்குணத்தில் இருந்து ஆரணிக்கு கொண்டு செல்வதாக டிரைவர் தெரிவித்தார். இருப்பினும் உரிய ஆவணங்கள் இல்லாததால் பறக்கும் படையினர் 375 சேலைகளையும் பறிமுதல் செய்து திருவண்ணாமலை நகராட்சி அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.