நெல் கொள்முதல் நிலைய முறைகேடுகளை கண்டித்து பா.ஜ.க.சார்பில் மனு

நெல் கொள்முதல் நிலையத்தில் நடக்கும் முறைகேடுகளை கண்டித்து பா.ஜ.க.சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தி மனு கொடுக்கப்பட்டது.

Update: 2022-05-25 06:35 GMT

நெல் கொள்முதல் நிலையத்தில் நடக்கும் முறைகேடுகள் குறித்து தமிழக பா.ஜ.க. விவசாய அணி  சார்பில் மாவட்ட ஆட்சியர் முருகேஷிடம் மனு அளிக்கப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சாபுரம் ஒன்றியத்திலுள்ள பல்வேறு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் முறையாக விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்வதில்லை, இடைத்தரகர் மூலம் முறைகேடு நடப்பதாக திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பா.ஜ.க. விவசாய அணி சார்பில் புகார்கள் கூறப்பட்டன.

இந்த பிரச்சினையில் நடவடிக்கை எடுக்கக்கோரி திருவண்ணாமலை அருகே உள்ள நாயுடுமங்கலம் கூட்ரோட்டில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட பா.ஜ.க. விவசாய பிரிவு தலைவர் பிரகாஷ் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக விவசாய அணி மாநிலத் தலைவர் நாகராஜ், மாநில செயலாளர் ராஜேஷ் குருசாமி, திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் ஜீவானந்தம் உள்பட பலர் பேசினர். இதில் மாவட்ட, ஒன்றிய நகர, அணி, பிரிவு, மற்றும் கிளை நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

கொள்முதல் நிலையத்தில் நடக்கும் பல்வேறு முறைகேடுகள் குறித்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் அவர்களிடம் தமிழக. பா.ஜ.க விவசாய அணி மாநில தலைவர் ஜி. கே. நாகராஜ்  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேரடியாக மனு அளித்தார்.

Tags:    

Similar News