திருவண்ணாமலை ரம்ஜான் நோன்பு திறப்பு நிகழ்வில் பங்கேற்ற அமைச்சர் எ.வ.வேலு

திருவண்ணாமலையில் நடைபெற்ற ரம்ஜான் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் அமைச்சர் எ.வ. வேலு பங்கேற்றார்

Update: 2024-04-01 12:34 GMT

ரம்ஜான் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் எ.வ. வேலு

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட நகர இந்திய முஸ்லிம் லீக் சார்பில் ரம்ஜான் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி திருவண்ணாமலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு ஹாஜி ஜமாலுதீன் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்துகொண்டு நோன்பு திறக்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.

அப்போது அவர் பேசுகையில் கூறியதாவது:-

திமுக ஆட்சிக்கு வரும்போது எல்லாம் இஸ்லாமிய பெருமக்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளை தங்கள் கடமைகள் என நினைத்து முதல்வர் செய்து வருகிறார். குறிப்பாக மிலாடிநபிக்கு அரசு விடுமுறை, அரசு வேலைவாய்ப்பில் இஸ்லாமியர்களுக்கு 3.5 சதவீதம் இட ஒதுக்கீடு, உலமாக்களுக்கு மிதிவண்டி ,உருது பேசும் முஸ்லிம்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்தது, வக்பு வாரிய சொத்துக்களை பராமரிக்க ரூபாய் 40 லட்சம் நிதியுதவி அளித்தது, உருது அகாடமி மற்றும் தமிழ்நாடு சிறுபான்மை பொருளாதார மேம்பாட்டு கழகம் உருவாக்கியது, என இஸ்லாமிய பெருமக்களுக்கு இந்த அரசு செய்துள்ளது.

இந்த ஆண்டு இஸ்லாமியர்களுக்காக பள்ளிவாசல் புனரமைப்பு செய்வதற்காக 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

திமுக அரசு வரும்போது எல்லாம் இஸ்லாமியர்களுக்கு பல்வேறு விதமான உதவிகளையும் திட்டங்களையும் நிறைவேற்றப்பட்டு வருகிறது.மத்திய அரசு சிஏஏ சட்டத்தை அமுல்படுத்தியது.

இந்த சட்டம் வருவதற்கு முக்கிய காரணமாக பாமக மாநில தலைவர் அன்புமணி ராமதாஸ் , உள்ளிட்ட அதிமுகவை சேர்ந்த 10 உறுப்பினர்கள் வாக்களித்ததால் தான் இந்த சட்டம் நிறைவேறியது.

இந்த சட்டத்திற்கு முழுமையாக எதிர்ப்பு தெரிவித்தது திராவிட முன்னேற்ற கழகம் தான்.

இந்தியாவின் சுதந்திர காற்றை சுவாசிக்க வித்திட்டவர்கள் இஸ்லாமியர்கள் தான், இதற்காக பலர் சிறை சென்றது தங்களது இன்னுயிரை நீர்த்ததை அமைச்சர் நினைவுகூர்ந்தார்.

இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் சிஏஏ சட்டத்தை ரத்து செய்யப்படும் என தமிழக முதல்வர் கூறியதை நினைவு படுத்திய அமைச்சர் இஸ்லாமியர்களும் திராவிட முன்னேற்ற கழகமும் இணைபிரியாத தோழர்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் சட்டப்பேரவை துணை சபாநாயகர் பிச்சாண்டி ,மாநில மருத்துவர் அணி துணைத் தலைவர் எ.வ.வே.கம்பன், தலைமை செயற்குழு உறுப்பினர் ஸ்ரீதரன், நகர செயலாளர் கார்த்தி வேல்மாறன், மாவட்ட துணை செயலாளர் பிரியா விஜயரங்கன், அனைத்து வியாபாரிகள் சங்க நிர்வாகிகள், இந்திய முஸ்லிம் லீக் நிர்வாகிகள், திமுக நிர்வாகிகள் , இஸ்லாமிய தோழர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News