வேங்கிக்கால் ஊராட்சி துணைத்தலைவர் மீது உறுப்பினர்கள் புகார்

திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வேங்கிக்கால் ஊராட்சியின் துணைத்தலைவர் மீது உறுப்பினர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

Update: 2022-06-07 07:06 GMT

வேங்கிக்கால் ஊராட்சி மன்றத்தலைவர் தலைமையில் உறுப்பினர்கள் திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) லட்சுமியிடம் துணைத்தலைவர் மீது புகார் மனு அளித்தனர்.

திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வேங்கிக்கால் ஊராட்சியில் தலைவர் மற்றும் 12 வார்டு உறுப்பினர்கள் உள்ளனர். இந்த ஊராட்சியில் துணைத்தலைவராக பாலாமூர்த்தி என்பவர் செயல்பட்டு வந்தார். இந்நிலையில் வேங்கிக்கால் ஊராட்சியில் சிறப்பு கூட்டம் நடத்தப்பட்டது.

ஊராட்சி மன்றத்தலைவர் சாந்தி தலைமை தாங்கினார். இதில் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் பாலாமூர்த்தி ஊராட்சி நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு அளிக்காமலும், கூட்டத்திற்கு தொடர்ந்து வருகை தராமலும், தன்னிச்சையாக செயல்பட்டு வருவதாகவும், அவரது துணைத்தலைவர் பதவி மற்றும் காசோலையில் துணை ஒப்பம் போடுவது ஆகியவற்றில் இருந்து விலக்கு அளித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதையடுத்து ஊராட்சி மன்றத்தலைவர் தலைமையில் 11 வார்டு உறுப்பினர்கள் திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) லட்சுமியிடம் மனு அளித்தனர். அந்த மனுவில் தெரிவித்துள்ளதாவது: வேங்கிக்கால் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் ஊராட்சி நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு அளிக்காமலும், கூட்டத்திற்கு தொடர்ந்து வருகை தராமலும், தன்னிச்சையாக செயல்பட்டு வருகிறார். இதனால் ஊராட்சி நிர்வாக பணிகள் சரிவர செயல்படுத்த இயலவில்லை.

மேலும் இந்த ஊராட்சியில் மாவட்டத்தின் தலைமையிடமான ஆட்சியர் அலுவலகம், மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் பலதுறை அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இதனால், தினமும் ஏதாவது ஒரு அரசு பணி நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இதனால், ஊராட்சியின் நிர்வாக நலன் கருதி பாலாமூர்த்தியை துணைத்தலைவர் பதவி மற்றும் காசோலையில் துணை ஒப்பம் பெறுவதில் இருந்து விடுவித்து இவ்வூராட்சியில் உள்ள 11-வது வார்டு உறுப்பினர் மஞ்சு என்பவருக்கு காசோலை துணை ஒப்பம் அளிப்பதற்கு உரிய அனுமதியும், உத்தரவும் அளிக்க வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டு உள்ளது.

Similar News