திருவண்ணாமலையில் கொடியேற்றத்துடன் துவங்கிய கார்த்திகை தீபத் திருவிழா

அண்ணாமலையார் கோயிலில் தீபத் திருவிழாவை முன்னிட்டு இன்று அதிகாலை கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2023-11-17 00:46 GMT

சிறப்பு அலங்காரத்தில் அருணாச்சலேஸ்வரர்.

அண்ணாமலையார் கோயிலில் தீபத் திருவிழாவை முன்னிட்டு இன்று அதிகாலை கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது.

நினைத்தாலே முக்தி தரும்’ திருவண்ணாமலை அண்ணா மலையார் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா, காவல் தெய்வ மான துர்க்கை அம்மன் உற்சவத்துடன் கடந்த 14ஆம் தேதி துவங்கியது.

தொடர்ந்து பிடாரி அம்மன் உற்சவம், நேற்று இரவு விநாயகர் சண்டிகேஸ்வரர் உற்சவங்கள் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து இன்று அதிகாலை அண்ணாமலையார் கோயிலில் மூலவர் சந்நிதி முன்பு உள்ள தங்கக்கொடி மரத்தில் கோவில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத, மேள தாளங்கள் முழங்க , அண்ணாமலையாருக்கு அரோகரா என்ற பக்தர்களின் கோஷத்துடன் கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது.

விநாயகர், வள்ளி தெய்வானையுடன் முருகப்பெருமான், உண்ணாமுலை அம்மன் சமேத அருணாச்சலேஸ்வரர் ,பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட உற்சவர்கள் கோயில் தங்க கொடிமரம் எதிரே சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர்.

இதைத் தொடர்ந்து இன்று முதல் காலை இரவு மாட வீதியில் பஞ்சமூர்த்திகள் உலாவரும் நிகழ்ச்சி நடைபெறும்.

23ம் தேதி நடைபெறும் 7-வது நாள் தேரோட்ட உற்சவத்தில் காலை 7.30 மணிக்கு மேல் விநாயகர் தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அதன் பிறகு ஒன்றன்பின் ஒன்றாக ஐந்து தேர்கள் மாட வீதியில் வலம் வரும்.

கார்த்திகை தீபத் திருவிழாவின் உச்ச நிகழ்ச்சியான தீப தரிசன நாளான 26ம் தேதி அதிகாலை 4 மணிக்கு அருணாசலேஸ்வரர் கோவில் கருவறைக்கு முன்பு பரணி தீபம் ஏற்றப்படும்.

மாலை 6 மணிக்கு பஞ்ச மூர்த்திகள் தீப தரிசன மண்டபத்தில் எழுந்தருள, ஆண்டுக்கு 5 நிமிடம் மட்டுமே காட்சி தரும் அர்த்தநாரீஸ்வரர் ஆனந்த தாண்டவம் ஆடியபடி வந்த பின்பு 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும்.

தீபத் திருவிழா கொடியேற்ற நிகழ்ச்சியில் துணை சபாநாயகர் பிச்சாண்டி, கலெக்டர் முகேஷ், மாவட்ட எஸ்பி கார்த்திகேயன், மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், இந்து அறநிலையத்துறை அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விழாவிற்கான ஏற்பாட்டினை அண்ணாமலையார் கோயில் இணை ஆணையர் ஜோதி, மற்றும் அறங்காவலர் குழு தலைவர் ஜீவானந்தம், அறங்காவலர்கள் ராஜாராம், பெருமாள், கோமதி குணசேகரன், திருக்கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News