கோயில் நிலத்தை ஆக்கிரமிக்க முயற்சி: இணை ஆணையர் நேரில்சென்று மீட்ப்பு

திருவண்ணாமலையில் ரூபாய் ஏழு கோடி மதிப்பிலான கோயில் நிலத்தை ஆக்கிரமிக்க முயற்சி இணை ஆணையர் நேரில்சென்று தடுத்து நிறுத்தம்

Update: 2021-09-29 08:24 GMT

வருண லிங்கம் அருகே தடுத்து நிறுத்தப்பட்ட கட்டுமான வேலைகள்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயில் கட்டுப்பாட்டில் கிரிவலப்பாதையில் அஷ்ட லிங்கங்கள் உள்ளது. இந்த அஷ்ட லிங்கத்திற்கும் தனித்தனி கோயில்கள் உள்ளன.  அதேபோல் அஷ்டலிங்க கோவில்களுக்கு தனித்தனியாக சொத்துக்களும் உள்ளது.

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் அருணாச்சலேஸ்வரர் கோயிலுக்கு உள்பட்ட வருணலிங்கம் சன்னதியும் அதையொட்டி 50 சென்ட் நிலமும் உள்ளது. அங்கிருந்த குடியிருப்பில் தங்கியிருந்த சாமியார் சில மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இதன்பிறகு குடியிருப்பை கையகப்படுத்திய அப்போதைய கோவில் இணை ஆணையர் ஞானசேகர் குடியிருப்பையும் நுழைவுவாயில் கதவையும் பூட்டு போட்டு பூட்டினர். சாவிகள் திருக்கோயில் அதிகாரிகளிடம் இருந்தன.

இந்நிலையில், அங்கு கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதாக கோயில் இணை ஆணையர் அசோக்குமாருக்கு  சிலர் அளித்த தகவலின் பேரில் சம்பந்தப்பட்ட நிலத்தை பார்வையிட சென்றார். அப்போது அங்கு கட்டுமானம் மேம்பாட்டு பணிகளில் சிலர் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து பணியாளர்களிடம் இணை ஆணையர் கேட்டபோது அவர்கள் பதில் அளிக்கவில்லை. இதையடுத்து பணிகளை நிறுத்தி குடியிருப்பு நுழைவாயிலை மீண்டும் பூட்டு போட்டு பூட்டினர்.

அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் வைக்கப்பட்டிருந்த சாவிகளை தனிநபர்களுக்கு எடுத்துக் கொடுத்த அதிகாரிகள் யார்? கட்டுமானம் மற்றும் மேம்பாட்டு பணிகளை செய்து கொள்ள அனுமதி அளித்தது யார்? என குறித்து கேள்வி எழுந்துள்ளது. பல ஆயிரம் கோடி மதிப்பிலான கோயில் சொத்துக்களை மீட்டு வரும் தமிழக அரசு, அருணாச்சலேஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான ரூபாய் ஏழு கோடி மதிப்பிலான நிலத்தை ஆக்கிரமிக்க முயன்றவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன் நிலத்தையும் மீட்டு பாதுகாக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை வைத்தனர்

கட்டுமான பணிகளை தடுத்து நிறுத்திய இணை ஆணையர் ஆக்கிரமிப்பு குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து அருணாசலேஸ்வரர் திருக்கோயில் இணை ஆணையர் அசோக்குமார் இடம் கேட்டபோது தனி நபர்கள் மேற்கொண்ட கட்டுமான பணியை தடுத்து நிறுத்தி உள்ளோம். அந்த குடியிருப்பு நுழைவாயில் கதவுகள் சாவிகள் எப்படி வெளியே சென்றன என்பது குறித்து துறைரீதியான விசாரணை நடத்தி வருகிறோம் என தெரிவித்தார்.

Tags:    

Similar News