அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை தொடக்க விழா

திருவண்ணாமலை பள்ளியில் மாணவர் சேர்க்கை தொடக்க விழா , துணை சபாநாயகர் பங்கேற்பு

Update: 2023-06-22 01:17 GMT

மாணவ-மாணவிகளுக்கு இலவச பாடப் புத்தங்களை வழங்கிய துணை சபாநாயகர் மற்றும் அதிகாரிகள்

திருவண்ணாமலை சண்முக அரசு மேல்நிலைப் பள்ளியில் இயங்கி வரும் அரசு மாதிரி பள்ளியில் பிளஸ் 1 மாணவர் சேர்க்கை தொடக்க விழா நடைபெற்றது. விழாவுக்கு, மாவட்ட ஆட்சியா் முருகேஷ் தலைமை வகித்தாா். மாவட்ட வருவாய் அலுவலா் பிரியதா்ஷினி, மாநில தடகள சங்கத்தின் துணைத் தலைவா் எ.வ.வே.கம்பன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கணேஷ்மூா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு, பிளஸ் 1 மாணவா் சோக்கையை தொடங்கிவைத்து மாணவ-மாணவிகளுக்கு இலவச பாடப் புத்தங்களை வழங்கினாா். பின்னர் பள்ளியில் உணவின் தரம் குறித்து ஆய்வு செய்தார். தொடா்ந்து, சிறப்பாகப் பணியாற்றிய 17 அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கு 10 கிராம் வெள்ளி நாணயங்களை கு.பிச்சாண்டி நினைவுப் பரிசாக வழங்கினாா்.

விழாவில், அரசு மாதிரிப் பள்ளியின் ஒருங்கிணைப்பாளா் பிரசன்னா, உயா்கல்வி வழிகாட்டி ஒருங்கிணைப்பாளா் ஆனந்த லட்சுமி, பள்ளித் தலைமை ஆசிரியா் ராமதாஸ், வட்டாட்சியா் சரளா உள்பட பலா் கலந்து கொண்டனா்.

கூட்டுறவு நியாய விலைக்கடை திறப்பு

திருவண்ணாமலை ஒன்றியத்தில் செயல்படும் வேங்கிக்கால் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் கட்டுப்பாட்டில் திருவண்ணாமலை அவலூர்பேட்டை ரோடு அய்யப்பன் நகர் பகுதியில் உள்ள தனி நபருக்கு சொந்தமான கட்டிடத்தில் புதிய பகுதி நேர கூட்டுறவு நியாய விலைக்கடை திறப்பு விழா நடைபெற்றது.

விழாவிற்கு மாவட்ட கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் பிரியதர்ஷினி, மாநில தடகள சங்க துணைத் தலைவர்  எ.வ.வே.கம்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் நடராஜன் வரவேற்றார்.

விழாவில் சட்டமன்ற துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி கலந்து கொண்டு புதிய பகுதி நேர நியாய விலைக் கடையை திறந்து வைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு அத்தியாவசிய மற்றும் சிறப்பு பொதுவிநியோகத் திட்ட பொருட்கள் வழங்கி தொடங்கி வைத்தார்.

விழாவில் துணைப் பதிவாளர் (பொது வினியோக திட்டம்) ராஜசேகரன், கூட்டுறவு சார் பதிவாளர் பிரதாப், திருவண்ணாமலை தாசில்தார் சரளா, வேங்கிக்கால் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி தமிழ்செல்வன், தி.மு.க. நிர்வாகிகள் கென்னடி, பரத், மகேந்திரன், தேவேந்திரன், ராஜா மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News