போலி ஏடிஎம் கார்டு கொடுத்து பண மோசடி

தொழிலாளியிடம் போலி ஏடிஎம் கார்டை கொடுத்து ரூபாய் 22,000 மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2023-07-28 11:35 GMT

போலி ஏடிஎம் கார்டு கொடுத்து பணம் மோசடி செய்திக்கான மாதிரி படம்

திருவண்ணாமலையில் தொழிலாளியிடம் போலி ஏ.டி.எம். கார்டை கொடுத்து ரூ.22 ஆயிரம் மோசடி செய்த நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவண்ணாமலையைச்  சேர்ந்தவர் சற்குணம், தொழிலாளி. இவர் திருவண்ணாமலை போளூர் சாலையில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் ஏடிஎம் மையத்திற்கு தனது வங்கிக் கணக்கில் பணம் எவ்வளவு இருப்பு உள்ளது என்பதை அறிவதற்காக சென்றார்.

பின்னர் அந்த ஏடிஎம் மையத்தில் உள்ள பணம் எடுக்கும் இயந்திரத்தில் ஏடிஎம் கார்டை சொருகி வங்கி கணக்கை பார்வையிட்டுள்ளார். அதனை அருகில் இருந்த அடையாளம் தெரியாத வாலிபர் ஒருவர் கவனித்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

வங்கிக்கணக்கை பார்த்துவிட்டு சற்குணம் அங்கிருந்து கிளம்பும் போது பணம் எடுக்கும் எந்திரத்தில் இருந்து ஏ.டி.எம். கார்டை எடுக்க முடியவில்லை. இதனை கவனித்துக் கொண்டிருந்த அடையாளம் தெரியாத நபர் இயந்திரத்தில் உங்களுடைய கார்டு சிக்கிக் கொண்டது .அதனால் காவலாளியை அழைத்து வருமாறு கூறியுள்ளார்.

பின்னர் சற்குணம் காவலாளியை அழைத்து வரச்  சென்ற நேரத்தில் அந்த வாலிபர் சற்குணத்தின் ஏடிஎம் கார்டை எடுத்துக்கொண்டு அவரிடமிருந்த போலி ஏடிஎம் கார்டை அதில் வைத்துள்ளார்.

இதனை அறியாமல் சற்குணம் போலி ஏடிஎம் கார்டை பெற்றுக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுவிட்டார்.  சிறிது நேரம் கழித்து அவரது செல்போன் எண்ணிற்கு அவருடைய வங்கிக் கணக்கில் இருந்து ரூபாய் 22,000 எடுத்தது போன்று குறுஞ்செய்தி வந்துள்ளது.

இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சற்குணம் சம்பந்தப்பட்ட வங்கிக்கு விரைந்து சென்று தனது வங்கி கணக்கை தணிக்கை செய்தார். அப்போது அவரது வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார் . மேலும் தன்னிடம் போலி ஏடிஎம் கார்டு இருப்பது அப்போது தான் தெரியவந்தது.

உடனடியாக அவர் திருவண்ணாமலை கிழக்கு போலீசில் புகார் செய்தார்.  அவருக்கு பின்னால் இருந்த அடையாளம் தெரியாத வாலிபர் போலி ஏடிஎம் கார்டை கொடுத்து பண மோசடியில் ஈடுபட்டிருக்கலாம் என்று அவர் புகார் தெரிவித்துள்ளார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த ஏடிஎம் மையத்தில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News