திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கஞ்சா பதுக்கி வைத்திருந்தவர் கைது
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த சாமியார் கைது செய்யப்பட்டார்.
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான சாதுக்கள் வசித்து வருகின்றனர். கிரிவலப்பாதையில் கஞ்சா விற்பனை அதிக அளவில் நடைபெறுவதாகவும், கஞ்சா போதையில் சில சாதுக்கள் தகராறில் ஈடுபடுவது, கிரிவலம் செல்லும் பக்தர்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருவதாக புகார் எழுந்துவந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த எஸ்பி பவன்குமார், கிரிவலப்பாதையில் போலீசார் ரோந்து செல்லவும், புதிதாக போலீஸ் ரோந்து வாகனமும் இயக்கி தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட உத்தரவிட்டார்.
நேற்று இரவு கிரிவலப்பாதையில், ஏஎஸ்பி கிரண்சுருதி தலைமையில் இன்ஸ்பெக்டர் ஹேமமாலினி மற்றும் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது வாயு லிங்கம் கோவில் அருகில், சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் இருந்த சாமியார் ஒருவரிடம் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது அவரிடம் விற்பனைக்காக சுமார் 100 கிராம் கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் தூத்துக்குடி மாவட்டம் மேலூர் பகுதியை சேர்ந்த பாக்கியநாதன் (வயது 52) எனத் தெரியவந்தது. திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் சாமியார் ஒருவரிடம் இருந்து கஞ்சா பறிமுதல் செய்துள்ள சம்பவம் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.