தென்பெண்ணை ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

கிருஷ்ணகிரி கேஆர்பி அணை, தனது முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் தென்பெண்ணை ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

Update: 2023-06-06 13:15 GMT

அணையை ஆய்வு செய்த அதிகாரிகள்

கர்நாடக மாநிலம் நந்தி மலையில் உற்பத்தியாகும் தென்பெண்ணையாறு தமிழகத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நுழைந்து தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களில் பயணித்து கடலூர் வழியாக வங்கக்கடலில் இணைகிறது. கிருஷ்ணகிரி அருகே இந்த ஆற்றின் குறுக்கே கேஆர்பி அணை கட்டப்பட்டுள்ளது.

52 அடி உயரம் கொண்ட இந்த கே ஆர் பி அணையில் ஆண்டு முழுவதும் தண்ணீர் சேமிக்கப்பட்டு இரு போக சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் சுமார் 9012 ஏக்கர் நிலங்கள் பாசன பெற்று வருகின்றன.  அதன்படி, கிருஷ்ணகிரி அணைக்கு இன்று காலை நீர்வரத்து விநாடிக்கு 404 கனஅடி இருந்தது. அணையின் மொத்த உயரமான 52 அடியில் நீர்மட்டம் 50.65 அடியாக இருந்தது. அணையில் இருந்து விநாடிக்கு 12 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.

இந்நிலையில் பிற்பகல் 1 மணியளவில் அணையில் இருந்து விநாடிக்கு 600 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.  நீர்வளத்துறை அலுவலர்கள் கூறும்போது, 'கிருஷ்ணகிரி அணையில் தற்போது 50.65 அடி உயரத்திற்கு தண்ணீர் இருப்பு உள்ளது. அணையில் 50.50 அடிக்கு தண்ணீர் இருப்பு வைக்க முடிவு செய்து, விநாடிக்கு 600 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. மேலும், எதிர்வரும் மழை மற்றும் கெலவரப்பள்ளி அணையில் திறக்கப்படும் நீரின் அளவை பொறுத்து, கிருஷ்ணகிரி அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்படும்.

எனவே, வழக்கமான மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.  

குறிப்பாக தென்பெண்ணை ஆற்றங்கரையோரத்தில் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல மாவட்ட நிர்வாகம் மற்றும் நீர்வளத்துறை மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது  என்றனர்.

Tags:    

Similar News