அண்ணாமலையார் கோவில் மாட வீதியில் சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி

சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு அண்ணாமலையார் கோவில் மாட வீதியில் உள்ள சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி தொடங்கியது.

Update: 2022-04-09 00:58 GMT

சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு மாட வீதியில் சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தொடங்கியது.

திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழாவின் போது லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள். அதேபோல் சித்ரா பவுர்ணமியன்று லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வார்கள்.  

இந்த ஆண்டிற்கான சித்ரா பவுர்ணமி வருகிற 15 மற்றும் 16-ந் தேதிகளில் வருகிறது. கொரோனா பரவல் காரணமாக 2 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு சித்ரா பவுர்ணமி நடைபெற உள்ளதால் 15 லட்சத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதைத்தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் மூலம் முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் கலெக்டர் முருகேஷ் திருவண்ணாமலை கிரிவலப்பாதை மற்றும் அருணாசலேஸ்வரர் கோவிலை சுற்றியுள்ள மாட வீதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டார்.

அதன்படி வட்டாட்சியர் தாசில்தார் சுரேஷ் முன்னிலையில் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் ரகுராமன், உதவி பொறியாளர் கலைமணி, சாலை ஆய்வாளர் பச்சையப்பன் மற்றும் நெடுஞ்சாலைத்துறையினர், வருவாய்த்துறையினர் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தொடங்கியது. சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த தரைக்கடைகள், தள்ளுவண்டிகள், கடைகளின் முன்பு உள்ள தகர கொட்டகைகள் போன்றவை பொக்லைன் எந்திரங்கள் உதவியுடன் அகற்றப்பட்டது.

முதல்கட்டமாக இன்று அருணாசலேஸ்வரர் கோவில் சுற்றியுள்ள மாடவீதி மற்றும் கிரிவலப்பாதையில் திருவண்ணாமலை அண்ணா நுழைவு வாயிலில் இருந்து அபயமண்டபம் வரை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.

தொடர்ந்து கிரிவல்பாதையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News