அரசு விழாவில் திமுக அரசியல் செய்து கொண்டிருக்கிறது: அர்ஜுன்சம்பத்
அரசு விழாவில் திமுக அரசியல் செய்து கொண்டிருக்கிறது என்று இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன்சம்பத் குற்றச்சாட்டு
திருவண்ணாமலைக்கு இன்று வந்த இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:நாடு முழுவதும் சுதந்திர இந்தியாவின் 75-வது ஆண்டு பவள விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவுடன் சுதந்திரம் அடைந்த பல்வேறு நாடுகள் பொருளாதார வீழ்ச்சியால் பின்தங்கி உள்ளது. 75 ஆண்டுகளில் உலக நாடுகளில் இந்தியா வல்லரசாகவும், நல்லரசாகவும் வளர்ந்துள்ளது.
தமிழக அரசு அனைத்து துறைகளையும் சிறப்பாக செயல்படுத்தி கொண்டிருக்கும் வேளையில் சுதந்திர இந்தியாவின் 75-வது ஆண்டு பவள விழாவில் அதிக கவனம் செலுத்தாதது வேதனை அளிக்கிறது. மொழிப்போர் தியாகிகள் மற்றும் திராவிட இயக்க தியாகிகளுக்கு வழங்கும் சலுகையை தியாகிகளுக்கும் வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும்.சுதந்திர இந்தியாவின் பவள விழா கொண்டாட்டத்திற்கு தமிழக அரசு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். மதமாற்ற தடை சட்டம் தமிழகத்தில் மதமாற்றம் செய்வது அதிகரித்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் மதமாற்றத்தால் இந்துக்கள் சிறுபான்மையினராக மாறியுள்ளனர். தமிழக அரசு மதமாற்ற தடை சட்டம் கொண்டு வர வேண்டும்
கோவில் சொத்து ஆக்கிரமிப்பு
கோவில் சொத்துக்கள் பல இடத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. எனவே, தமிழக அரசு பாரபட்சம் காட்டாமல் நடவடிக்கை எடுத்து கோவில் ஆக்கிரமிப்பு இடங்கள் மீட்க வேண்டும். மேலும் திருவண்ணாமலை நகரை இணைக்கும் 9 பாதையின் முகப்பிலும் அண்ணாமலையார் நுழைவு வாயில் அமைக்க வேண்டும். அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு விரைவில் யானை கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.அப்போது இந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர் அசோக்குமார், பா.ஜ.க. பட்டியல் அணி மாவட்டத் தலைவர் விஜயராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.