திருவண்ணாமலையில் மாற்றுத்திறனாளிகளுக்கு மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள்

திருவண்ணாமலை மாவட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.

Update: 2022-04-22 00:59 GMT

திருவண்ணாமலை மாவட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கு விளையாட்டு போட்டிகள் நடந்தது. போட்டிகளை கலெக்டர் முருகேஷ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் நடந்தது.

போட்டிகளை கலெக்டர் முருகேஷ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் கால் ஊனமுற்றோருக்கு 50 மீட்டர் ஓட்ட பந்தயம் மற்றும் குண்டு எறிதல், கை ஊனமுற்றோருக்கு 100 மீட்டர் ஓட்ட பந்தயம், குள்ளமானோருக்கு 50 மீட்டர் ஓட்ட பந்தயம், இருகால்களும் ஊனமுற்றோருக்கு 100 மீட்டர் சக்கர நாற்காலி போட்டி மற்றும் முற்றிலும் பார்வையற்றோருக்கு 50 மீட்டர் ஓட்ட பந்தயம், மிகக்குறைந்த அளவில் பார்வையற்றோருக்கு நின்ற நிலையில் தாண்டுதல், 100 மீட்டர் ஓட்ட பந்தயம் போன்ற போட்டிகள் நடந்தன.

மனநலம் பாதிக்கப்பட்டவர்களில் புத்தி சுவாதின தன்மை முற்றிலும் இல்லாதவர்களுக்கு 50 மீட்டர் ஓட்ட பந்தயம், மூளை நரம்பு பாதிக்கப்பட்டவர்கள் நின்ற நிலையில் தாண்டுதல் போட்டி, புத்தி சுவாதினம் தன்மை நல்ல நிலையில் இருப்பவர்கள் குண்டு எறிதல், 100 மீட்டர் ஓட்ட பந்தயம் மற்றும் காது கேளாதோருக்கு 100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர் ஓட்ட பந்தயம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல் போன்ற போட்டிகள் நடந்தன. 

மேலும் கை, கால் ஊனமுற்றோர், கண்பார்வையற்றோர் மனநலம் குன்றியவர்களுக்கான தடகள விளையாட்டு போட்டிகள் மற்றும் இறகுப்பந்து, டேபிள் டென்னிஸ், வாலிபால், எறிப்பந்து, கபாடி போன்ற குழு விளையாட்டு போட்டிகள் நடந்தன. விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு, பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டன. அதில் 300-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் (பொறுப்பு) பாலாஜி, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் நான்சி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News