திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் மகாதீப மை விநியோகம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் மகாதீப மை இன்று முதல் பக்தர்களுக்கு விநியோகம்

Update: 2021-12-23 13:26 GMT

அருணாசலேஸ்வரர் கோவிலில் மகாதீப மை பக்தர்களுக்கு விநியோகம் செய்யப்பட்ட காட்சி.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தீபத் திருவிழா முடிவடைந்ததும் மகா தீப கொப்பரையில் சேமிக்கப்பட்ட தீபம் பக்தர்களுக்கு பிரசாதமாக விற்பனை செய்யப்படும். மேலும் நெய் காணிக்கை வழங்கியவர்களுக்கு இலவசமாக தீப மை வழங்கப்படும்.

இந்த ஆண்டுக்கான தீபத் திருவிழாவை முன்னிட்டு கடந்த நவம்பர் மாதம் 19-ந்தேதி மகாதீபம் ஏற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து 11 நாட்கள் மகாதீபம் பக்தர்களுக்கு காட்சி அளித்தது. அதன் பின்னர் பரிகார பூஜைகள் செய்து தீப கொப்பரை கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது. இதன் பின்னர் ஆருத்ரா தரிசனத்தன்று தீப மையால் நடராஜருக்கு திலகமிட்டு பின்பு பக்தர்களுக்கு வழங்கப்படுவது வழக்கம்.

அன்று முக்கிய பிரமுகர்களுக்கும் ஒரு சில பக்தர்களுக்கு மட்டும் தீப மை கிடைக்கும்,   இதைத்தொடர்ந்து பேக்கிங் செய்யப்பட்ட தீப மை இன்று காலை அண்ணாமலையார் கோவில் வளாகத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டது. ரூ.10 க்கு விற்பனை செய்யப்படும் இந்த தீப மையை வெளியூர் பக்தர்கள் ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர். உள்ளூர் பக்தர்கள் தங்களது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு வாங்கி சென்றனர்.  மேலும் நெய் காணிக்கை வழங்கியவர்களுக்கு இலவசமாக தீப மை   வழங்கப்பட்டது. 

கோவிலுக்கு வந்த அனைத்து பக்தர்களும் தீப மை வாங்குவதில் ஆர்வம் காட்டினர். இந்த தீப மையை வைத்துக் கொள்வதால் பக்தர்களின் வேண்டுதல்கள் நிறைவேறும் என்று கூறப்படுகிறது.

Tags:    

Similar News