கார்த்திகை தீப திருவிழா: மக்கள் நண்பர்கள் குழுவிற்கு துணை சபாநாயகர் பாராட்டு

திருவண்ணாமலை திருக்கார்த்திகை விழாவின் போது மக்கள் நண்பர்கள் குழுவினர்கள் சேவை பணியை துணை சபாநாயகர் பிச்சாண்டி பாராட்டினார்

Update: 2023-12-18 03:00 GMT

மக்கள் நண்பர்கள் குழுவினருக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கிய துணை சபாநாயகர்

திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத் திருவிழாவில் திருவண்ணாமலை மாவட்ட மக்கள் நண்பர்கள் குழுவினர்கள் சேவை பணியை பாராட்டி திருவண்ணாமலை தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு சட்டப்பேரவை துணை சபாநாயகர் பிச்சாண்டி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.

விழாவிற்கு திருவண்ணாமலை மாவட்ட மக்கள் நண்பர்கள் குழு ஒருங்கிணைப்பாளர் ஆறுமுகம் தலைமை தாங்கினார் . திருவண்ணாமலை தாலுக்கா காவல் ஆய்வாளர் விஜயபாஸ்கர், திருவண்ணாமலை குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் அன்பரசு, திருவண்ணாமலை மாவட்டம் மக்கள் நண்பர்களுக்கு குழு துணை ஒருங்கிணைப்பாளர்கள் ஆசிரியர் சபரி, ஆசிரியர் ஜான் கிங்ஸ்லி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்டத் துணை ஒருங்கிணைப்பாளர் கோபிநாத் அனைவரையும் வரவேற்று பேசினார். பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட 500க்கும் மேற்பட்ட திருவண்ணாமலை மாவட்டம் மக்கள் நண்பர்கள் குழுவினர்களின் சேவை பணியை பாராட்டி தமிழ்நாடு சட்டப்பேரவை துணை சபாநாயகர் பிச்சாண்டி, பாராட்டு சான்றுகளையும் பரிசுகளையும் வழங்கி பேசினார்.

பின்னர் சட்டப்பேரவை துணை சபாநாயகர் பேசுவையில், திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத் திருவிழாவில் பாதுகாப்பு பணியாற்றிய இளைஞர்களுக்கு பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும் இந்த ஆண்டு திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து மலை சுற்றும் பாதையில் தூய்மைப் பணியும், மாவட்ட காவல்துறையுடன் இணைந்து பல்வேறு காவல் பாதுகாப்பு பணியிலும், மாவட்ட வனத்துறையுடன் இணைந்து மலையேறும் பாதையில் பாதுகாப்பு பணியிலும் மிகச் சிறப்பாக செய்தீர்கள்.

இதனை நானே பல இடங்களில் நேரில் பார்த்தேன். இப்பணியில் ஈடுபட்டு வந்த அனைத்து இளைஞர்களுக்கும் எனது பாராட்டுகளையும், நன்றியையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் திருவண்ணாமலை மாவட்ட மக்கள் நண்பர்கள் குழுவினர்கள் சுமார் 25 ஆண்டுகளாக இந்த பணியை செய்து வருகின்றனர். சேவை பணியாற்றிய பல இளைஞர்கள் இன்று பல துறைகளில் உயர் பொறுப்புகளில் சேவையாற்றி வருகின்றார்கள். தன்னார்வம் கொண்ட உங்களைப்போல் உள்ள இளைஞர்களால் தான் அரசுக்கும் மக்களுக்கும் பாலமாக விளங்கி சேவை பணியாற்றுவதில் முதலிடம் பெற்று இருக்கிறீர்கள். மக்கள் சேவையில் யார் தங்களை முழுமையாக அர்ப்பணிக்கின்றார்களோ அவர்களே தலைசிறந்த தலைவர்களாக வருவார்கள்.

எனவே மாணவர்கள் இளைஞர்கள் நேரம் கிடைக்கும்போது நாட்டிற்காகவும் மக்களுக்காகவும் உங்கள் ஊர்களில் நடக்கும் திருவிழா காலங்களிலும், அவசர காலங்களிலும் சேவை பணியாற்றுவது தங்களுக்கு மன நிறைவு மட்டுமல்ல ,சமுதாய சீர்திருத்தும் பணியும் கூட ஆகும் .அதுவே உங்கள் வெற்றிக்கு வழிவகுக்கும் என பேசினார்.

இந்த விழாவில் நகர காவல் உதவி ஆய்வாளர்கள் ,  தலைமை காவலர்கள், நகர துணை ஒருங்கிணைப்பாளர்கள், உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News