திருவண்ணாமலையில் தீபத் திருவிழா இன்றுடன் நிறைவு: அமர்வு தரிசனம் ரத்து

அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா இன்றுடன் நிறைவடைவதால் அமர்வு தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Update: 2022-12-10 01:09 GMT

அருணாசலேஸ்வரர் கோவில்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 27-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழா நாட்களில் தினமும் காலையில் விநாயகர், சந்திரசேகரர் வீதி உலாவும், இரவில் விநாயகர், முருகர், உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்ச மூர்த்திகள் வீதி உலாவும் நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பரணி தீபம், மகா தீபம் ஏற்றும் நிகழ்ச்சி கடந்த 6-ந் தேதி நடைபெற்றது. அன்று காலையில் கோவில் வளாகத்தில் பரணி தீபமும், மாலையில் 2,668 அடி உயர மலையில் மகா தீபமும் ஏற்றப்பட்டது.

மகா தீபத்தையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.

இன்று மாலை சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் கார்த்திகை தீபத் திருவிழா நிறைவடைகிறது. அப்போது சண்டிகேஸ்வரர் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி மாடவீதிகளில் உலா வர உள்ளார்.

அமர்வு தரிசனம் ரத்து

கோவில் பின்புறம் உள்ள மலை உச்சியில் மகா தீபம் கடந்த 6-ந் தேதி ஏற்றப்பட்டது. இந்த மகா தீபம் தொடர்ந்து 11 நாட்கள் மலை உச்சியில் மாலை நேரத்தில் ஏற்றப்பட்டு தொடர்ந்து காட்சி அளிக்கும். அதன்படி வருகிற 16-ந் தேதி (வெள்ளிக்கிழமை) வரை மகா தீபம் காட்சி அளிக்கும்.

மகா தீபத்தை தரிசனம் செய்ய தொடர்ந்து பக்தர்கள் வருகை தருவதால் அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் காணப்படுகிறது.

அதனால் வருகிற 16-ந் தேதி வரை கோவிலில் அமர்வு தரிசனம் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக அருணாசலேஸ்வரர் கோவில் இணை ஆணையர் அசோக்குமார் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News