இழப்பீடு வழங்காததால் கோர்ட் உத்தரவுப்படி அரசு பேருந்துகள் ஜப்தி

விபத்து இழப்பீடு வழங்காததால் நீதிமன்ற உத்தரவுபடி, திருவண்ணாமலை பேருந்து நிலையத்தில் 2 அரசு பேருந்துகள் ஜப்தி செய்யப்பட்டது

Update: 2021-12-29 08:12 GMT

திருவண்ணாமலை பஸ் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 அரசு பஸ்கள் கோர்ட் உத்தரவுப்படி ஜப்தி செய்யப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் அடுத்த சின்னகாலூர் பகுதியை சேர்ந்தவர் பாரதி மகன் பூங்காவனம்(31). இவர் கடந்த 2008ம் ஆண்டு ஜனவரி மாதம் சென்னைக்கு அரசு பேருந்தில் சென்றுள்ளார். சென்னை நந்தம்பாக்கம் அருகே சென்றபோது அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி மீது பேருந்து  மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயம் அடைந்த பூங்காவனம் சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தொடர்ந்து, உரிய இழப்பீடு கேட்டு தொடரப்பட்ட வழக்கில், பாதிக்கப்பட்ட நபருக்கு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் ரூபாய் 4.10 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டது.ஆனால், நீண்ட நாட்களாகியும் இழப்பீடு தொகை வழங்காததால் கோர்ட் ஊழியர்கள்  திருவண்ணாமலை பேருந்து  நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசு பேருந்தை  ஜப்தி செய்தனர். 

இதேபோல், சாத்தனூர் பகுதியை சேர்ந்த விவசாயி வெங்கடாஜலம்(43) என்பவர், கடந்த 2003ம் ஆண்டு ஜூலை மாதம் சோனாகுட்டை பகுதியில் இருந்து சாத்தனூர் செல்லும் அரசு பஸ்சில் சென்றுள்ளார். சாத்தனூர் அருகே வந்தபோது பேருந்து விபத்துக்குள்ளானது. இதில் வெங்கடாஜலம் உட்பட 20 பேர் படுகாயம் அடைந்தனர்.

இதில் பாதிக்கப்பட்ட வெங்கடாஜலத்துக்கு அரசு போக்குவரத்து கழகம் இழப்பீடு தொகையாக ரூபாய் 69 ஆயிரம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டது. ஆனால், நீண்ட நாட்களாகியும் இழப்பீடு வழங்காததால், திருவண்ணாமலை பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த திருச்சி செல்லும் அரசு பேருந்தை  ஜப்தி செய்து நீதிமன்றத்திற்கு கொண்டு சென்றனர்.

Tags:    

Similar News