முதல்வரின் காலை உணவு திட்டம்: திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் துவக்கம்

Healthy Breakfast For School -திருவண்ணாமலை மாவட்டத்தில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தை அமைச்சர் எ.வ.வேலு தொடங்கி வைத்தார்.

Update: 2022-09-17 01:28 GMT

முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தினை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு உணவுகளை பரிமாறி துவக்கி வைத்தார்.

Healthy Breakfast For School-திருவண்ணாமலை நகராட்சியில் கீழ்நாத்தூர் நகராட்சி தொடக்கப் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தினை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு உணவுகளை பரிமாறி மாணவ மாணவியரோடு அமர்ந்து உணவருந்தி துவக்கி வைத்தார்.

திருவண்ணாமலை நகராட்சி கீழ்நாத்தூரில் உள்ள நகராட்சி தொடக்கப்பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 5-–ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு வருகை புரிந்த அமைச்சர், துணை சபாநாயகர், மாவட்ட ஆட்சியர் மற்றும் முக்கிய பிரமுகர்கள், அதிகாரிகளை கீழ்நாத்தூர் நகர மன்ற உறுப்பினர் பொறியாளர் கணேசன் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது

கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கினார். துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி முன்னிலை வகித்தார். நகராட்சி ஆணையாளர் முருகேசன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டு முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தினை மாணவர்களுக்கு உணவு பரிமாறி தொடங்கி வைத்து குழந்தைகளுக்கு உணவினை ஊட்டி மகிழ்ந்தார். தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

திராவிட மாடல் ஆட்சி செய்து கொண்டிருக்கின்ற முதல்- அமைச்சர் 15 மாத காலமாக மக்களுக்கு பல்வேறு திட்டங்களை அறிவித்து நிறைவேற்றி வருகிறார். இதில் மகத்தான திட்டமான முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தினை சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை நகரில் அவர் தொடங்கி வைத்தார்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை நகராட்சியில் 17 பள்ளிகளிலும், ஜவ்வாதுமலை ஒன்றியத்தில் உள்ள 46 பள்ளிகளிலும் மற்றும் திருவத்திபுரம் நகராட்சியில் 7 பள்ளிகளிலும் என மொத்தம் 67 பள்ளிகளில் 3 ஆயிரத்து 517 மாணவ, மாணவிகளுக்கு இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. முதற்கட்டமாக தொடங்கப்பட்ட இத்திட்டம் வருங்காலங்களில் அனைத்து பள்ளிகளிலும் செயல்படுத்தப்படும்.

முன்னாள் முதல்- அமைச்சர் காமராஜர் ஆட்சிக்காலத்தில் பள்ளிகளில் மதிய உணவு திட்டத்தினை கொண்டு வந்தார். எம்.ஜி.ஆர். ஆட்சிக்காலத்தில் சத்துணவு திட்டமாக மாற்றப்பட்டு பள்ளிகளில் உணவு வழங்கப்பட்டது. கருணாநிதி 1989-90 காலங்களில் மாணவர்களுக்கு புரதச்சத்து கிடைக்க வேண்டும் என்ற காரணத்தினால் பள்ளிகளில் சத்துணவுடன் முட்டை வழங்கப்பட்டது. காலை வேளைகளில் பள்ளிக்கு வரும் மாணவர்கள் சாப்பிடாமல் வரக்கூடாது என்ற நோக்கத்தை கருத்தில் கொண்டு தொடங்கி வைக்கப்பட்ட காலை உணவு திட்டமானது மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக தமிழகத்தில் செயல்படுத்தப்படுகிறது.

குழந்தைகளை வஞ்சிக்க கூடாது என்று தாய் உள்ளம் கொண்ட தமிழக முதலமைச்சர் இந்தத் திட்டத்தை கொண்டு வந்துள்ளார். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளி குழந்தைகளுக்கும் காலை உணவு வழங்க வேண்டும் என்று திட்டத்தைக் கொண்டு வந்தவரை தாய் என்று சொல்லாமல் வேறு என்ன சொல்ல முடியும், மாணவர்கள் வாழ்வில் பல்வேறு உயர் பொறுப்புகளில் வரவேண்டும் என்ற உன்னத நோக்கத்தில் இத்திட்டத்தை தொடங்கி வைத்த முதல்- அமைச்சருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் கிரி எம்.எல்.ஏ., நகரமன்ற தலைவர் நிர்மலா கார்த்திவேல்மாறன், மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, முதன்மைக்கல்வி அலுவலர் கணேஷ்மூர்த்தி, ஆர்டிஓ  வெற்றிவேல், மாநில தடகள சங்க துணைத் தலைவர் எ.வ.வே.கம்பன், தலைமை செயற்குழு உறுப்பினர் ஸ்ரீதரன், நகர செயலாளர் கார்த்திவேல்மாறன், ஒன்றியக்குழு தலைவர்கள் கலைவாணி கலைமணி, பரிமளா கலையரசு, பிரியாவிஜயரங்கன், ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags:    

Similar News