திருவண்ணாமலையில் சமரச மையம் குறித்த விழிப்புணர்வு பேரணி

திருவண்ணாமலையில் நீதிமன்ற சமரச மையம் மூலம் வழக்குகளில் தீர்வு முறை குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது

Update: 2024-04-11 10:27 GMT

இலவச சமரச மையத்தின் செயல்பாடுகள் அடங்கிய விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கிய மாவட்ட நீதிபதி மதுசூதனன்

திருவண்ணாமலை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், சமரச தின விழிப்புணா்வு முகாம், புத்தகக் கண்காட்சி, கல்லூரி மாணவா்கள் பங்கேற்ற சமரச தின விழிப்புணா்வுப் பேரணி ஆகியவை நடைபெற்றன.

இந்தியா முழுவதும் உச்ச நீதிமன்றம் வழிகாட்டுதல் படி தேங்கி உள்ள சிறு வழக்குகளை முடித்து வைப்பதற்காக உயர்நீதிமன்றம் மற்றும் மாவட்ட நீதிமன்றங்களில் சமரச மையங்கள் செயல்பட்டு வருகிறது. நீதிமன்றங்களில் நிலுவையில் இருக்கும் வழக்குகளை சமரசம் மையத்திற்கு அனுப்பி இரு தரப்பினருக்கும் எந்தவித இழப்பும் இல்லாமல் சமரசத்தின் மூலம் தீர்வு காணப்பட்டு வருகிறது. இதனால் வழக்காடிகளுக்கான இரு தரப்பு உறவுகளும் மேம்பட வழி செய்கிறது.

மேலும் இந்த சமரசம் மையத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் நிகழ்வுகளுக்கு பிறகு மேல்முறையீடு இல்லை எனவும் இதற்காக செலுத்தப்பட்ட நீதிமன்ற கட்டணங்கள் திருப்பி அளிக்கப்படுகிறது . இந்த வழிகாட்டுதல் நெறிமுறகைளை பின்பற்றி அனைத்து மாவட்டங்களிலும் சமரச மையங்கள் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் பொது மக்களுக்கு இது குறித்த விழிப்புணர்வு அளிக்கும் வகையில் விழிப்புணர்வு செய்ய சென்னை உயர்நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றங்களுக்கு அறிவுறுத்தியது.

அவ்வகையில் திருவண்ணாமலை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், சமரச தின விழிப்புணா்வு முகாம், புத்தகக் கண்காட்சி, கல்லூரி மாணவா்கள் பங்கேற்ற சமரச தின விழிப்புணா்வுப் பேரணி ஆகியவை புதன்கிழமை நடைபெற்றன.

மாவட்ட சமரச மையம் சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, மையத்தின் ஒருங்கிணைப்பாளரும், மாவட்ட முதன்மை அமா்வு நீதிபதியுமான பி.மதுசூதனன் தலைமை வகித்து, விழிப்புணா்வு முகாமைத் தொடங்கிவைத்தாா்.

தொடா்ந்து, சிறப்பாக பணிபுரிந்த சமரச மையத்தின் வழக்குரைஞா்களுக்கு சான்றிதழ், கேடயங்களை முதன்மை அமா்வு நீதிபதி பி.மதுசூதனன் வழங்கினாா். இதில், சமரச மையத்தின் ஒருங்கிணைப்பாளரும், தலைமை குற்றவியல் நீதிபதியுமான ஜெயசூரியா, பாா் அசோசியேஷன் தலைவா் நாக.குமாா், அட்வகேட் அசோசியேஷன் தலைவா் அன்பழகன் மற்றும் நீதிபதிகள், நீதிமன்ற ஊழியா்கள், பொதுமக்கள் பலா் கலந்து கொண்டனா்.

முன்னதாக, இலவச சமரச மையத்தின் செயல்பாடுகள் அடங்கிய விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை பொதுமக்களிடம் மாவட்ட முதன்மை அமா்வு நீதிபதி பி.மதுசூதனன் வழங்கினாா்.

Tags:    

Similar News