நெகிழி இல்லா திருவண்ணாமலை மாவட்டம் என்ற விழிப்புணர்வு ஊர்வலம்
தூய்மை பாரத இயக்கம் சார்பில் நெகிழி இல்லா திருவண்ணாமலை மாவட்டம் என்ற விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) சார்பில் பிளாஸ்டிக் இல்லா திருவண்ணாமலை மாவட்டம் என்ற விழிப்புணர்வு ஊர்வலம் திருவண்ணாமலையில் நடைபெற்றது. ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தொடங்கிய இந்த ஊர்வலத்தை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் தலைமை தாங்கி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
ஊரக வளர்ச்சி முகமை திட்ட உதவி அலுவலர் இமயவர்மன் முன்னிலை வகித்தார். தூய்மை பாரத இயக்க மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் ராணி வரவேற்றார். இதில் திருவண்ணாமலை, கலசபாக்கம், துரிஞ்சாபுரம், புதுப்பாளையம், தண்டராம்பட்டு வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
ஊர்வலம் வேங்கிக்கால் ஊராட்சி அலுவலகம் வரை சென்றது. இதில் தூய்மை பணியாளர்கள் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்களை தவிர்ப்போம் என்ற விழிப்புணர்வு வாசகங்கள் எழுதிய பதாகைகளை கையில் ஏந்தியபடி ஊர்வலமாக சென்றனர்.