திமுக இளைஞரணி, மாணவரணி சார்பில் இந்தி எதிர்ப்பு போராட்டம்

திருவண்ணாமலையில் திமுக இளைஞரணி மாணவரணி சார்பாக இந்தி எதிர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

Update: 2022-10-15 15:44 GMT

திமுக இளைஞர் அணி, மாணவர் அணி சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்

திமுக தலைமை அறிவித்தபடி திமுக இளைஞரணி- மாணவரணி சார்பில் திருவண்ணாமலை அண்ணா சிலை முன்பு மாவட்ட திமுக இளைஞரணி மாணவரணி சார்பில் மத்திய அரசின் ஆதிக்க இந்தியை மீண்டும் திணிக்க திட்டமா ? இந்தியா முழுவதும் ஒரே பொது நுழைவு தேர்வா ? என இந்தி திணிப்பு திட்டத்தையும், ஒரே பொது நுழைவுத் தேர்வு திட்டத்தையும் திரும்ப பெற வலியுறுத்தி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட இளைஞரணி அமைப்பாளருமான சி என் அண்ணாதுரை தலைமை தாங்கினார்.

வடக்கு மாவட்ட செயலாளர் தரணி வேந்தன், மாநில திமுக மருத்துவரணி துணைத் தலைவர் மருத்துவர் எ. வ. வே. கம்பன், ஆகியோர் கண்டன முழக்கங்கள் எழுப்பி சிறப்புரையாற்றினர்.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய முக்கிய தலைவர்கள், தற்பொழுது மத்திய அரசு இந்தி மொழியை பல்வேறு வழிகள் திணிக்க பார்க்கிறது. மத்திய பல்கலைக்கழக பொது நுழைவு தேர்வு ஆங்கிலத்தில் மற்றும் இந்தியில் மட்டுமே நடைபெறும் என்றும் இந்திய அரசின் பல்வேறு துறைகளில் இந்தி மொழி மட்டுமே பயன்படுத்தப்படும் என்றும் அறிவித்துள்ளது. இது நமது எதிர்கால சந்ததிகளுக்கு மிகப்பெரிய பாதிப்பை உருவாக்கும். 

மேலும் இதனால் மத்திய அரசின் வேலைவாய்ப்புகளையும் பெற முடியாது. தற்பொழுது மத்திய அரசு புதிய கல்வி கொள்கை மூலம் சிபிஎஸ்சி பாடத்திட்டத்தின் மூலம் மாணவர்களுக்கு பயன்படாத பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது . இதுவும் தமிழக மக்களுக்கு எதிரான செயல் ஆகும். எனவே தான் புதிய கல்விக் கொள்கையை எதிர்க்கிறோம்.

இந்திய இறையாண்மையை பாதுகாக்க வேண்டும் இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிராக மாநிலங்களில் உரிமையை பறிக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும். ஒரே நாடு ஒரே மொழி ஒரே கலாச்சாரம் என்ற கொள்கையை மத்திய அரசு திணிக்க கூடாது. மாநில மொழியை அழிக்க நினைக்க கூடாது, மாநில உரிமைகளை பறிக்கக் கூடாது. இந்தி திணிப்பின் மூலம் மற்றொரு மொழி போரை மக்கள் மீது திணிக்க கூடாது. 

பல்லாயிரம் ஆண்டுகள் கடந்த தமிழ் மொழி பாதுகாக்கப்பட வேண்டும் . மத்திய அரசு அலுவலகங்களில் இந்தியை திணிக்க கூடாது.  பொது நுழைவுத் தேர்வு திட்டத்தை கைவிட வேண்டும்  என்பன உள்ளிட்டவற்றை ஆர்ப்பாட்டத்தில் பேசிய தலைவர்கள் எடுத்துரைத்தனர்.

ஆர்ப்பாட்டத்தில்  செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி , கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பெ.சு.தி.சரவணன், செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஜோதி, வந்தவாசி சட்டமன்ற உறுப்பினர் அம்பேத் குமார் , நகரமன்ற தலைவர் நிர்மலா வேல்மாறன், முன்னாள் நகரமன்ற தலைவர் ஸ்ரீதரன், நகர கழக செயலாளர் கார்த்திக் வேல்மாறன், மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவையின் அமைப்பாளர் டி.வி.எம்.நேரு,  பொதுக்குழு உறுப்பினர் பிரியா விஜயரங்கன் உள்பட பலர் கலந்து கொண்டனர்

Tags:    

Similar News