பணம் இரட்டித்து தருவதாக கூறி ரூ.1.35 கோடி மோசடி நடந்ததாக புகார்

பங்குச்சந்தையில் முதலீடு செய்து இரட்டிப்பாக பணத்தை திருப்பித்தருவதாக கூறி ரூ.1.35 கோடி மோசடி செய்ததாக புகார் அளிக்கப்பட்டது.

Update: 2022-03-22 06:40 GMT

பாதிக்கப்பட்டவர்கள் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு அளித்தனர்

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் தாலுகா ஜமீன் கூடலூரை சேர்ந்த தேவராஜூ உள்பட 15-க்கும் மேற்பட்டவர்கள்  திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

நாங்கள் விவசாயம், கூலி தொழில் செய்து வருகின்றோம். கடந்த 2019-ம் ஆண்டு எங்கள் பகுதியை சேர்ந்த நன்கு அறிமுகமான ஒரே குடும்பத்தை சேர்ந்த நபர்கள் நாங்கள் பங்கு சந்தையில் முதலீடு செய்து உள்ளோம். நீங்கள் எங்களிடம் பணம் கொடுத்தால் அந்த பணத்தை பங்கு சந்தையில் முதலீடு செய்து அதை இரட்டிப்பாக்கி ஒரு வருடத்தில் தருவதாக ஆசை வார்த்தை கூறி பணத்தை பெற்று கொண்டனர்.

அவர்கள் எங்களிடம் இருந்து ரூ.1 கோடியே 35 லட்சம் வரை பெற்று உள்ளனர். ஆனால் அவர்கள் எங்களிடம் இருந்து பெற்ற பணத்தை திருப்பி தரவில்லை. கடந்த 13-ந் தேதி நாங்கள் அவர்கள் வீட்டிற்கு நேரடியாக சென்று கேட்ட போது எங்களை தரக்குறைவாக பேசி பணத்தை திருப்பி தர முடியாது என்றும், தொடர்ந்து பணத்தை கேட்டால் உங்களை கொலை செய்து விடுவோம் என்றும் அவர்கள் கொலை மிரட்டல் விடுக்கின்றனர். 

இது குறித்து கீழ்பென்னாத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தோம். போலீசார் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க வில்லை. எனவே இது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உரிய நடவடிக்கை மேற்கொண்டு பணத்தை மீட்டுத் தர வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News