திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவில் தேர் பணிகள்: அதிகாரிகள் ஆய்வு

திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவில் தேர் பணிகளை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

Update: 2023-01-15 06:30 GMT

திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவில் தேர் பணிகளை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருவள்ளூரில் உள்ள வைத்திய வீரராகவப் பெருமாள் கோயிலுக்கு திருவள்ளூர் மாவட்டம் மட்டுமல்லாது சென்னை, காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற பிற மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு முன்னோர்களுக்கு கோயில் அருகில் உள்ள குளக்கரையை சுற்றி தர்ப்பணம் செய்வார்கள்.

இக் கோயிலில் தை ப்ரம்மோத்ஸவ விழா வருகிற ஜனவரி மாதம் 17-ம் தேதி செவ்வாய்க்கிழமை தொடங்கி 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறுகிறது. அதன்படி 7-ம் நாளான ஜனவரி 23-ந் தேதி திங்கட்கிழமை காலை 7 மணிக்கு தேர் வீதி புறப்பாடு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. திருவள்ளூர் நகரின் 4 முக்கிய மாட வீதிகளில் இந்தத் தேர் வீதி உலா வருகிறது.

இந்நிலையில் கடந்த ஆண்டு தஞ்சாவூரில் நடைபெற்ற தேர்த் திருவிழாவின் போது தேர் மின்கம்பத்தில் உரசி மின்சாரம் பாய்ந்து 11 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்தது. இதனை அடுத்து திருவள்ளூர் ஸ்ரீ வைத்திய வீரராகவப் பெருமாள் கோவில் சார்பில் நடைபெறும் தேர் திருவிழாவின் போது அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் இருக்க வேண்டும் என்பதற்காக மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் உத்தரவின் பேரில் திருவள்ளூர் சார் ஆட்சியர் ஏ.பி மகாபாரதி தலைமையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

நான்கு மாட வீதிகளில் சாலை வசதி, மின் கம்பங்கள் சரியான உயரத்தில் இருக்கிறதா, மின் ஒயர்கள் உரசாத அளவிற்கு பாதுகாப்பாக இருக்கிறதா, சாலையோர கடைகள் இருந்தால் அதை அகற்றுவது குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.

தேர் திருவிழாவின் போது தேரோட்டம் தடையின்றி நடபைெற வேண்டும் என்பதற்காக இந்த ஆய்வு நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த ஆய்வின் போது நகராட்சி ஆணையர் க. ராஜலட்சுமி, நகர மன்ற தலைவர் உதய மலர் பாண்டியன், திருவள்ளூர் வட்டாட்சியர் மதியழகன், வீரராகவர் கோயில் கௌரவ ஏஜென்ட் சி.சி.சம்பத், கோயில் பிஆர்ஓ எஸ்.சம்பத், உள்ளிட்ட பலர் இந்த ஆய்வின் போது உடனிருந்தனர்.

Tags:    

Similar News