சோழவரம் அருகே மின்சாரம் தாக்கி சகோதரர்கள் உயிரிழப்பு

சோழவரம் அருகே ஞாயிறு ஊராட்சியில் மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2023-12-16 09:00 GMT

பைல் படம்

சோழவரம் அருகே மின்சாரம் தாக்கி சகோதரர்கள் இருவர் பரிதாபமாக உயிரிழப்பு. மோட்டார் பம்ப்செட் அருகே இரும்பு கம்பியில் இருந்து மின்சாரம் பாய்ந்தது. காவல்துறையினர் விசாரணை.

திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் அடுத்த ஞாயிறு ஊராட்சிக்குட்பட்ட கண்ணியம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கூலி தொழிலாளியான முனுசாமி - ஜீவா தம்பதியர்களுக்கு விஸ்வா (12), சூர்யா (10) என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்கள் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் படித்து வந்தனர். விஸ்வா 7ஆம் வகுப்பும், சூர்யா 6ஆம் வகுப்பும் படித்து வந்துள்ளனர். நேற்று முதலே சோழவரம் சுற்றுவட்டார இடங்களில் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது.

இன்று காலையும் விட்டுவிட்டு மழை பெய்தது. இந்நிலையில் இன்று காலை சிறுவர்கள் இருவரும் அருகில் உள்ள மோட்டார் பம்ப்செட்டிற்கு சென்றபோது அங்கிருந்த இரும்பு கம்பியில் மின்சாரம் பாய்ந்து இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்து சோழவரம் போலீசார் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

சிறுவர்கள் இருவரது சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து சோழவரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதரர்கள் இருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News