திருவள்ளூர் அருகே இரண்டு பள்ளி ஆசிரியர்கள் தற்காலிக பணி நீக்கம்..!

திருவள்ளூர் அருகே செவ்வாப்பேட்டை அரசினர் மேல்நிலை பள்ளியில் மாணவிகளிடம் தவறாக நடந்து கொண்ட விவகாரத்தில் இரண்டு ஆசிரியர்கள் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டனர்.

Update: 2024-07-10 03:45 GMT

பள்ளியில் விசாணை முடித்து வெளியே வரும் குழந்தைகள் நல அலுவலர்கள்.

திருவள்ளூர் அருகே செவ்வாபேட்டை அரசினர் ஆதிதிராவிடர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளிடம் தவறாக நடந்து கொண்டதாக இரு ஆசிரியர்கள் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம், செவ்வாப்பேட்டையில் அரசினர் ஆதிதிராவிடர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் செவ்வாப்பேட்டை சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த 400க்கும் மேற்பட்ட மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த நிலையில் பள்ளி மாணவிகளிடம் ஒரு சில ஆசிரியர்கள் பாலியல் ரீதியாக சீண்டியதாக புகார் எழுந்தது.

இதைத் தொடர்ந்து ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல் விழி செல்வராஜுக்கு புகார்கள் சென்ற நிலையில் இந்தப் புகாரின் மீது கடந்த 1-ம் தேதியன்று ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் செவ்வாப்பேட்டையில் உள்ள பள்ளிக்கு வந்து திடீர் ஆய்வு மேற்கொண்டு பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் மாணவிகளிடம் தீவிர விசாரணை நடத்தினார்.

மேலும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நலத்துறையினர் பள்ளியில் பயிலும் மாணவிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் (குட் டச்) (பேட் டச் ) நல்ல தொடுதல், கெட்ட தொடுதல் குறித்து விளக்கமாக வகுப்புகள் எடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

இதில் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவிகள் பலர் கலந்து கொண்டனர். அப்போது அங்கிருந்த சில மாணவிகள் கணித ஆசிரியர் ஜெகதீசன், அறிவியல் ஆசிரியர் பிரேம்குமார் ஆகிய இருவரும் மாணவிகளிடம் தவறான முறையில் பார்ப்பதும், கை வைத்தும் தவறாக  நடந்து கொண்டதாக மாணவிகள் புகார் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல் விழி செல்வராஜூக்கு அறிக்கை அனுப்பப்பட்டதைத்  தொடர்ந்து, ஆதிதிராவிடர்நலத்துறை பள்ளிக் கல்வித் துறை இயக்குனரகம் மூலம் இது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து மேற்கண்ட இரண்டு ஆசிரியர்களும் தற்காலிக பணிநீக்கம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. 

Tags:    

Similar News