முன்னாள் ரயில்வே காவலர் வீட்டில் ரூ.10 லட்சம் நகை, பணம் கொள்ளை!

செவ்வாப்பேட்டையில் முன்னாள் ரயில்வே காவலரின் வீட்டில் ரூ.10 லட்சம் மதிப்பிலான நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டது.

Update: 2021-05-19 14:16 GMT

பீரோவின் கதவு உடைக்கப்பட்டிருப்பதை காணலாம்.

திருவள்ளூரை அடுத்த செவ்வாப்பேட்டை திருவள்ளுவர் நகர் பகுதியை சேர்ந்தவர் சந்திரன். இவர் ரயில்வே காவல் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற காவலர். இவருக்கு கீதா என்ற மனைவியும், கிட்டுமணி மகனும் உள்ளனர்.

ஸ்ரீபெரம்பத்தூர் அருகே தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் கிட்டுமணி, அந்த நிறுவனத்தில் பணிபுரியும் போது, தவறி விழுந்ததில் கையில் பலத்த காயம் அடைந்தது. இதனால். கிட்டுமணிக்கு கையில் கட்டு போடுவதற்காக சந்திரன் அவரது மனைவி மற்றும் மகன் உள்ளிட்டோர் திருவண்ணாமலையில் உள்ள மருத்துவமனைக்கு   சென்றுள்ளனர்.

இந்நிலையில் காலை எதிர் வீட்டில் குடியிருக்கும் நபர் சந்திரனுக்கு தொலைபேசி மூலமாக வீடு திறந்து கிடப்பதாகவும், திருடர்கள் யாரேனும் வந்திருக்கக்கூடும் என்றும் கூறினார். 

அதன்பேரில் சந்திரன், அவசர அவசரமாக திருவண்ணாமலையில் இருந்து திரும்பி வந்து பார்த்தபோது, வீடு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவர் உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது பீரோவின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 23 சவரன் தங்க நகைகள்,  2 கிலோ வெள்ளி மற்றும் ரொக்கமாக வைத்திருந்த ரூ.12 ஆயிரம் ஆக மொத்தம் 10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் திருடு போனது தெரியவந்தது.

இதுகுறித்து சந்திரன் கொடுத்த புகாரின் அடிப்படையில் செவ்வாப்பேட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News