சிறையில் பதுக்கி வைத்திருந்த செல்போன்கள் பறிமுதல்

புழல் சிறையில் பூமிக்கு அடியில் மறைத்து வைத்திருந்த இரண்டு செல்போன்களை போலீஸார் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்

Update: 2023-09-01 03:30 GMT

புழல் சிறை பைல் படம்

புழல் சிறையில் பூமியில் மறைத்தும், கழிவறையில் பதுக்கியும் வைக்கப்பட்டிருந்த 2செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் சிறை காவலர்களை மிரட்டிய 6கைதிகள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

சென்னை புழல் மத்திய சிறையின் தண்டனை பிரிவில் சிறை காவலர்கள் வழக்கமான ரோந்து பணியினை மேற்கொண்டனர். அப்போது மரத்தடியில் பூமிக்கடியில் பாலித்தீன் பையில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த செல்போன், சிம்கார்டு பறிமுதல் செய்யப்பட்டது. இதே போல விசாரணை சிறையில் சிறை காவலர்கள் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது கழிவறையில் பேப்பரில் சுற்றி வைத்திருந்த பொட்டலத்தை ஆய்வு செய்ததில் செல்போன் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை சிறை காவலர்கள் பறிமுதல் செய்ய முற்பட்டபோது அந்த அறையில் இருந்த 6விசாரணை கைதிகள் காவலர்களிடம் தகராறில் ஈடுபட்டு மிரட்டல் விடுத்துள்ளனர்.

தொடர்ந்து செல்போனை சிறை காவலர்கள் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து சிறை அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் புழல் போலீசார் சிறை காவலர்களை மிரட்டிய 6விசாரணை கைதிகள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சமீப காலத்தில் இருந்து புழல் சிறையில் செல்போன்கள் பறிமுதல், போதை பொருட்கள் கடத்தல் உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. 



Tags:    

Similar News