ரயில்வே மேம்பாலம் பணிகள் விரைந்து முடிக்க எம்எல்ஏ அமைச்சரிடம் மனு

ரயில்வே மேம்பாலப் பணிகளை விரைந்து மேற்கொள்ள பணிகளை துரிதப்படுத்திட வலியுறுத்தி பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சரிடம் எம்எல்ஏ மனு அளித்தார்.

Update: 2022-11-24 07:15 GMT

வேப்பம்பட்டு , செவ்வாப்பேட்டை ரயில்வே மேம்பாலப் பணிகளை விரைந்து மேற்கொள்ள நிலம் கையகப்படுத்தும் பணிகளை துரிதப்படுத்திட வலியுறுத்தி பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலுவிடம் பூவிருந்தமல்லி எம்எல்ஏ., ஆ.கிருஷ்ணசாமி கோரிக்கை மனு அளித்தார்.

வேப்பம்பட்டு, செவ்வாப்பேட்டை ஆகிய ரயில்வே மேம்பாலப் பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நிலம் கையகப்படுத்தும் பணிகளை துரிதப்படுத்திட வலியுறுத்தி பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலுவிடம் பூவிருந்தவல்லி எம்எல்ஏ., ஆ.கிருஷ்ணசாமி கோரிக்கை மனு அளித்துள்ளார். சென்னை - அரக்கோணம் ரயில்வே மார்க்கத்தில் திருவள்ளூர் அருகே உள்ளது பூவிருந்தவல்லி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வேப்பம்பட்டு மற்றும் செவ்வாப்பேட்டை ரயில் நிலையங்கள்.

இதில் வேப்பம்பட்டு ரயில் நிலையத்தின் அருகே ரயில்வே கேட் உள்ளது. இந்த ரயில்வே கேட் வழியாக, தினமும், ஆயிரக்கணக்கானோர் வேலைக்கும் மருத்துவ சிகிச்சைக்கும் பள்ளி, கல்லூரிக்கு செல்பவர்கள் கடந்து சென்று வருகின்றனர். இந்த ரயில் தண்டவாளம் வழியாக நாள்தோறும் 250-க்கும் மேற்பட்ட புறநகர் ரயில்கள் மற்றும் விரைவு ரயில்கள், சரக்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதனால் ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து ரயில்வே மேம்பாலம் கட்டுவதற்கு 2011-ம் ஆண்டு, சென்னை பெருநகர வளர்ச்சி திட்டத்தின் கீழ் புதிய மேம்பால கட்டுமானப் பணிக்கு மட்டும் ஒப்பந்தம் விடப்பட்டு துவங்கியது.15 மாதங்களில் முடிக்க திட்டமிடப்பட்டு துவங்கிய பணிகள் நிறைவடையாமல் கிடப்பில் போடப்பட்டது. இந்நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர், பாலம் இறங்கும் பகுதியை மாற்றிட வேண்டுமென புகார் அளித்ததன் பேரில், இடம் மாற்ற செய்ய முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, 10 மாதங்கள் கழித்து, 12.3.2012- ம் தேதி, வல்லுநர் குழுவினர் நிராகரித்த, ஒன்றாவது எல்லையில் பணிகள் மீண்டும் துவங்கப்பட்டது. இதனால் வேப்பம்பட்டு ரயில்வே கேட் மூடப்பட்டது.

இதனால் வேப்பம்பட்டு ரயில் நிலையத்திலிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்திலுள்ள மற்றோரு ரயில்வே கேட்டை கடந்து தான் பள்ளி, கல்லூரிக்கு செல்பவர்கள், வேலைக்கு செல்பவர்கள் செல்ல வேண்டியிருந்தது. இந்த வழக்கில் கடந்த 2021 டிசம்பரில் நீதிமன்றம் மீண்டும் ரயில்வே மேம்பாலப் பணிகளை தொடங்க உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. ஆனால் பணிகள் இன்னும் நிறைவு பெறவில்லை.

அதே போல் செவ்வாப்பேட்டை ரயில் நிலையத்தின் அருகே ரயில்வே கேட் உள்ளது. இங்கு பொது மக்களின் கோரிக்கையை ஏற்று ரயில்வே நிர்வாகம் மற்றும் நெடுஞ்சாலைத் துறையினர் கடந்த 2011- ம் ஆண்டு, ரயில்வே மேம்பாலம் கட்ட அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி பாலம் கட்டும் பணி அதே ஆண்டு துவக்கப்பட்தால் ரயில்வே கேட் மூடப்பட்டது.

இதனால் செவ்வாப்பேட்டை ரயில் நிலையம் அருகில் உள்ள சுரங்கப்பாதை வழியாக இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள், ஆட்டோவில் செல்பவர்கள் கடந்து சென்றனர். ஆனால் தற்போது அந்த சுரங்கப்பாதையில் மழை நீர்தேங்கி இருப்பதால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. அதே நேரத்தில் பாம்பு போன்ற விஷ பூச்சிகளும் இருப்பதால் மேம்பாலப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பொது மக்கள் ரயில் மறியல் மற்றும் போராட்டத்தை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் வேப்பம்பட்டு மற்றும் செவ்வாப்பேட்டை இரயில்வே மேம்பாலப்பணிகள் விரைந்து மேற்கொள்ள நிலம் கையகபடுத்துதல் பணிகளை துரிதப்படுத்தி, மேம்பால கட்டுமானப் பணிகளை விரைந்து முடித்ததிட பொதுப்பணிதுறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலுவிடம் பூவிருந்தவல்லி எம்எல்ஏ., ஆ.கிருஷ்ணசாமி நேரில் சந்தித்து கோரிக்கை மனு வழங்கினார். நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் உறுதியளித்துள்ளார்.

Tags:    

Similar News