புழலில் மர்மமான முறையில் சிறுமி உயிரிழப்பு..!

புழலில் 6 வயது சிறுமி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2024-04-23 05:15 GMT

உயிரிழந்த சிறுமி.

புழல் அருகே 6வயது சிறுமி மர்மமான முறையில் உயிரிழப்பு. குளிக்கும் போது தண்ணீரில் மூழ்கியதாக தாயின் கள்ளக்காதலன் தகவல். தாயின் கள்ளக்காதலனை பிடித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம், மாதவரம் தொகுதி புழல் காந்தி 1வது தெருவில் வசித்து வருபவர் திவ்யா ( வயது 31). இவரது கணவர் விஜயகாந்த்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக திவ்யா கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்துள்ளார். இவர்களுக்கு (9வயது) கதிர்வேல் என்ற மகனும், தேஜஸ்வினி என்ற (6வயது) பெண் குழந்தையும் இருந்துள்ளது.

திவ்யா சென்னையில் உள்ள அரசியல் கட்சி தலைவர் ஒருவரது (ரவி பச்சமுத்து) வீட்டில் பணியாற்றி வருகிறார்.அங்கு உடன் பணிபுரிந்து வரும் சீனிவாசன் ( வயது 32) என்பவருடன் திவ்யா பழகி வந்துள்ளார்.இவர்கள் இருவரும் திருவள்ளூரில் குடியிருந்து வந்த நிலையில் கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன் புழல் பகுதிக்கு குடி பெயர்ந்துள்ளனர்.நேற்று காலை வழக்கம் போல திவ்யா வேலைக்கு சென்றுவிட்ட நிலையில் குழந்தைகளை வீட்டில் விட்டுவிட்டு சென்றுள்ளார்.

திவ்யாவின் கள்ளக்காதலன் சீனிவாசன் சிறிது நேரத்தில் தேஜஸ்வினி குளிக்கும் போது தண்ணீரில் மூழ்கியதாக கூறி சிறுமியை தூக்கிக் கொண்டு ஓடினார். இதனைக் கண்டு அக்கம் பக்கத்தினர் விசாரித்த பொழுது அவர்களுக்கு முறையாக பதில் ஏதும் கூறாமல் சீனிவாசன் தேஜஸ்வினியை தூக்கிக் கொண்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். இந்த காட்சிகள் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.

புழலில் உள்ள மாநகராட்சி சமுதாய நல மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர்கள் சிறுமி வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த புழல் போலீசார் சிறுமியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் தாயின் கள்ளக்காதலன் சீனிவாசனை பிடித்து புழல் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தமக்கும், திவ்யாவுக்கும் இடையே உள்ள கள்ளக்காதலுக்கு சிறுமி இடையூறாக இருப்பதால் சீனிவாசன் அடித்து கொலை செய்துவிட்டு நாடகமாடுகிறாரா என்ற கோணத்தில்  விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

வீட்டில் ரத்தக் கறை படிந்திருந்த நிலையில் பிரேத பரிசோதனையின் போது சிறுமியின் உடலில் காயங்கள், பாலியல் தொல்லை கொடுத்ததற்கான அறிகுறிகள் ஏதேனும் கண்டறியப்பட்டால் அதற்கேற்ப அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறுமி உயிர் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News