திருவள்ளூரில் ரவுடியாக உருவெடுக்கும் சிறுவர்கள்.
திருவள்ளூரில் துணிகடையில் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த 4 பேர் கைது;
ரவுடியிசத்தில் ஈடுபட்டவர்கள்
திருவள்ளூரை அடுத்த சின்ன ஈக்காடு, அன்னை தெரேசா நகரில் வசித்து வருபவர் ஆனந்தன். இவரது மகன் பரத் (23). இவர் திருவள்ளூர் ஜெ.என்.சாலையிலுள்ள துணிக்கடையில் வேலை செய்து வருகிறார்.
இவர் வழக்கம் போல் காலையில் வேலைக்கு வந்த போது முன்விரோதம் காரணமாக திருவள்ளூர் நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பத்தியால்பேட்டை பகுதியை சேர்ந்த தனுஷ் (20), விஜய் (20), வள்ளுவர் புரத்தை சேர்ந்த சூர்யா (20), காக்களூர் பகுதியை சேர்ந்த விக்ரம் (18) ஆகிய 4 பேர் கத்தியை காட்டி மிரட்டியும், கத்தி மற்றும் இரும்பு பைப்புகளைக் கொண்டு பலமாக தாக்கி கொலை முயற்சியிலும் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் பரத் பணி செய்து வரும் துணி கடைக்குள் புகுந்து கத்தியை காட்டி மிரட்டி அச்சுறுத்தலை ஏற்படுத்தி கடையில் இருந்த ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்துச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் குறித்து கடையின் உரிமையாளர் சதீஷ் (27) மற்றும் பலத்த காயமடைந்த பரத் ஆகியோர் திருவள்ளூர் நகர காவல் நிலையத்தில் தனித்தனியாக புகார் கொடுத்தனர்.
திருவள்ளூர் டிஎஸ்பி சந்திரதாசன் உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர் பத்மஸ்ரீ வழக்குப்பதிவு செய்து 4 பேரையும் கைது செய்து திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். சிறுவயதிலேயே கத்தியை காட்டி துணிகடையில் பணம் பறித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.