திருநின்றவூரில் கொரோனாவுக்கு பயந்து கிருமிநாசினி குடித்து பெண் தற்கொலை

திருநின்றவூரில் கொரோனா தொற்றுக்கு பயந்து கிருமிநாசினி குடித்து பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-05-27 14:17 GMT

கிருமிநாசினி குடித்து தற்கொலை செய்துகொண்ட பெண் .

சென்னை ஆவடியை அடுத்த திருநின்றவூர், எல்லையம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவர் தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி அன்புக்கரசி (55). இவர்களுக்கு  ஹரிஹரன் (25) என்கற மகன் உள்ளார். இவருக்கு கடந்த வாரம் கொரோனா தொற்று நோய் உறுதி செய்யப்பட்டு வீட்டில் தனிமையில் இருந்து சிகிச்சை பெற்று வருகிறார். இவரை பெற்றோர் கவனித்து வந்தனர்.

இதனையடுத்து, ஆறுமுகம், அன்புக்கரசி இருவரும் கடந்த 24ந்தேதி தொற்று தொடர்பாக பரிசோதனை செய்து கொண்டனர். பின்னர், அவர்களும் வீட்டில் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டனர். இதற்கிடையில், பரிசோதனை முடிவில் தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படும் என நினைத்து அன்புக்கரசி அச்சத்தில் இருந்துள்ளார்.

இதனால், அவர் மன உளைச்சலும் அடைந்துள்ளார். இந்நிலையில், கடந்த 25ந்தேதி அன்புக்கரசி வீட்டில் இருந்த லைசால் என்ற கிருமிநாசினியை குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இதில், அவர் வாந்தி எடுத்து மயங்கி விழுந்தார். அவரை உறவினர்கள் மீட்டு திருவள்ளூரில் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர்.

மேல் சிகிச்சைக்காக அவர் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு  சிகிச்சை பலனின்றி அன்புக்கரசி இன்று காலை பரிதாபமாக இறந்தார்.  அவருக்கும், கணவர் ஆறுமுகத்திற்கும் தொற்று இல்லை என்பது உறுதியானது. புகாரின் அடிப்படையில்,  திருநின்றவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News