நண்பர்களுடன் ஜாேடிகள்; போதையில் கும்மாளம்.. மண்டை உடைப்பு

நண்பர்களுடன் குடிபோதையில் காவலாளியின் மண்டை உடைத்த காதல் ஜோடி கைது செய்யப்பட்டனர்.

Update: 2021-07-30 12:33 GMT

பைல் படம்.

ஆவடி, ஸ்ரீதேவி நகர், சர்.வி.ராமன் தெருவை சேர்ந்தவர் புருசோத்தமன் (48). இவர், ஆவடி அருகே சேக்காடு கிராமத்தில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் காவலாளியாக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், நேற்று இரவு புருசோத்தமன் வளாகத்தில் காவல் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது, அங்கு வசிக்கும் ஒரு இளம் பெண், இரு வாலிபர்கள், ஒரு பெண் தோழியுடன் மதுபோதையில் வளாகத்துக்குள் நடந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனை பார்த்த புருஷோத்தமன் இரவில் வெளியே நடமாடக் கூடாது என அறிவுரை கூறியுள்ளார்.

இதனையடுத்து, காவலாளி புருசோத்தமனுக்கும், அவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர், தகராறு ஏற்பட்டு அவர்கள் அனைவரும் சேர்ந்து காவலாளியை கைகளால் அடித்துள்ளனர். மேலும், அவர்கள் அருகில் கிடந்த இரும்பு பைப்பை எடுத்து, புருசோத்தமன் தலையில் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில், அவரது மண்டை உடைந்து ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்தார். இதனை பார்த்த 4பேரும் அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவானார்கள்.

சத்தம் கேட்டு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்தவர்கள் ஓடி வந்துள்ளனர். பின்னர், அவர்கள் புருசோத்தமனை மீட்டு, ஆவடி அரசு மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இது குறித்து காவலாளி புருசோத்தமன் ஆவடி காவல் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் கோபிநாத் தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.

அதில், அதே அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் லட்சுமிபிரியா (20), ஆவடி, ஓ.சி.எப் குடியிருப்பு, கிரி நகரைச் சார்ந்த விக்னேஷ் (20) உட்பட 4பேர்கள் காவலாளி புருசோத்தமனை தாக்கியது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் தலைமறைவாக இருந்த லட்சுமி பிரியா, விக்னேஷ் இருவரும் இன்று மாலை கைது செய்தனர்.

இவர்கள் இருவரும் காதலர்கள் என போலீசார் தெரிவித்தனர். இந்த வழக்கு தொடர்பாக, மேலும் இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News