வேளாண் சட்டத் திருத்தம் எதிராக திருப்பூரில் மனிதநேய மக்கள் கட்சி போராட்டம்

மத்திய அரசின் வேளாண் சட்டத் திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி திருப்பூரில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற மனிதநேய மக்கள் கட்சியினரை காவல்துறையினர் கைது செய்தனர்.

Update: 2020-12-14 12:00 GMT

மத்திய அரசின் வேளாண் சட்டத் திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் தொடர்ந்து 18 வது நாளாக போராடி வருகின்ற சூழ்நிலையில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் , மத்திய அரசு உடனடியாக விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று வேளான் சட்டத் திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும் எனக்கோரி திருப்பூரில் ரயில் மறியல் போராட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சியினர் ஈடுபட முயன்றனர்.

ஆனால், காவல்துறை வைத்திருந்த தடுப்புகளையும் மீறி உள்ளே செல்ல முயன்ற அவர்களை காவல்துறையினர் தடுத்தனர். இதனால் திருப்பூர் டவுன்ஹால் மைதானம் அருகே உள்ள பாலத்தின் இரு சாலைகளையும் அடைத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஊர்வலமாக வந்த மனிதநேய மக்கள் கட்சியினர் ஏர்கலப்பை, மண்சட்டி உள்ளிட்ட விவசாய உபகரணங்களுடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து காவல்துறையினர் உடனடியாக அவர்களை கைது செய்தனர். 

Similar News