திருக்குறள் குறளோவியம் போட்டி: வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஆட்சியர் பரிசு வழங்கல்

மாநில அளிவல் நடைபெற்ற திருக்குறள் குறளோவியம் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ,மாணவியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசுத்தொகையினை ஆட்சியர் விஷ்ணு வழங்கினார்.

Update: 2022-05-02 08:32 GMT

திருக்குறள் குறளோவியம் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ.மாணவியர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுத்தொகையினை மாவட்ட ஆட்சித் தலைவர் வே.விஷ்ணு வழங்கினார்.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தமிழ் இணையக் கல்வி கழகம் சார்பில், மாநில அளிவல் நடைபெற்ற திருக்குறள் குறளோவியம் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசுத்தொகையினை மாவட்ட ஆட்சித் தலைவர் வே.விஷ்ணு வழங்கினார்.

பின்னர் பேசிய மாவட்ட ஆட்சித் தலைவர் வே.விஷ்ணு, தமிழ் வளர்ச்சித்துறை தீராக் காதல் திருக்குறள் என்ற பெயரில் தீந்தமிழ் நிகழ்ச்சிகளைத் தமிழ் இணையக் கல்விக்கழகம் நடத்தியது. அதனடிப்படையில் மாநில அளவில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கான குறளோவியம் என்ற பெயரில் ஓவியப் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் சிறந்த 365 ஓவியங்கள் தெரிவு செய்து மாநில அளவில் போட்டியில் வெற்றி பெற்ற முதல் மூன்று இடங்களைப் பெற்ற பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் பரிசுகள் வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து திருநெல்வேலி மாவட்டத்தில் தமிழ் இணையக் கல்வி கழகம் சார்பில் நடைபெற்ற போட்டியில் பாளையங்கோட்டை ஸ்ரீ ஜெயந்திரா சுவாமிகள் பள்ளியை சேர்ந்த 8 வகுப்பு படிக்கும் மாணவி பிரியதர்ஷினிக்கும், வள்ளியூர் அரசு மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் மாரி கைலாஷ்க்கும் தலா ரூ. 5000 சிறப்பு பரிசும், மற்றும் பாராட்டு சான்றிதழ்களும், திருநெல்வேலி பிரான்சிஸ் சேவியர் பள்ளியை சேர்ந்த 7 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி வித்யாலெட்சுமிக்கு ரூ.1000 ஊக்கபரிசும் மற்றும் பாராட்டு சான்றிதழ்களும், இன்று வழங்கப்பட்டது.

மாவட்டத்தில் உள்ள மாணவ, மாணவியர்கள் தாங்கள் படிக்கும் பள்ளியில் போட்டிகள் நடத்தப்பட்டால் ஆர்வமுடன் போட்டியில் கலந்து கொள்ள வேண்டும். போட்டியில் கலந்து கொண்டால் மனநிறைவு மற்றும் தன்னம்பிக்கை ஏற்படும். எனவே பள்ளியில் படிக்கும் அனைத்து மாணவ,மாணவியர்களும் போட்டியில் கலந்து கொண்டு தனது திறமை வெளிப்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் வே.விஷ்ணு தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.பெருமாள், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) எம்.கணேஷ்குமார், சமூக பாதுகாப்பு திட்ட தனிதுணை ஆட்சியர் குமாரதாஸ், உட்பட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags:    

Similar News