உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுக்கே வெற்றி : தளவாய் சுந்தரம் கணிப்பு
உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக அமோகமாக வெற்றி பெறும் என்று, அக்கட்சி அமைப்பு செயலாளர் தளவாய் சுந்தரம் தெரிவித்தார்.
இது தொடர்பாக, அதிமுக அமைப்பு செயலாளர் தளவாய் சுந்தரம், நெல்லையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஊரக உள்ளாட்சித் தேர்தல் வெற்றி தேர்தலாக அமையும். நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து உள்ளாட்சி பதவிகளிலும், அதிமுக வெற்றி பெறும். திமுக ஆட்சியின் குறைகளை எடுத்துச் சொல்லி, வெற்றி பெறுவோம்.
கூட்டுறவு சங்க நகைக்கடன் பெற்று அதில் முறைகேடு நடந்ததாக கூட்டுறவுத்துறை அமைச்சர் நெல்லையில் உண்மைக்குப் புறம்பான தகவலை தெரிவித்துள்ளார். கூட்டுறவு கடன் வாங்கியதில் முறைகேடு செய்தவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கவர்னரிடம் கோப்பு நிலுவையில் இருக்கும் போதே, சட்டவிதி 162 பயன்படுத்தி 7.5 சதவீத மருத்துவ மாணவர் இட ஒதுக்கீடை, முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கொண்டு வந்துள்ளார். இது போன்ற நடவடிக்கை எடுக்க வேறு எந்த தமிழக முதலமைச்சரும் செய்தது கிடையாது. இவ்வாறு, அவர் கூறினார்.
அதிமுகவின் அமைப்புச் செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கருப்பசாமிபாண்டியன் கூறுகையில் சட்டமன்ற தேர்தலில் அதிமுகவால் பயன்பெற்ற ஒரு குடும்பத்தின் (சசிகலா) துரோகத்தால் தான் அதிமுக தோல்வி அடைந்தது என்றார். நெல்லை மாவட்ட அதிமுக செயலாளர் தச்சை கணேசராஜா உடனிருந்தார்.