குடிநீர் இணைப்புகளில் பயன்படுத்திய 36 மின் மோட்டார்கள் பறிமுதல்
நெல்லையில் சட்டத்திற்கு புறம்பாக வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் பயன்படுத்திய 36 மின் மோட்டார்களை மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
திருநெல்வேலி மாநகராட்சி நான்கு மண்டல பகுதிகளில் தனி குழுக்கள் அமைத்து 2வது நாளாக ஆய்வு மேற்கொண்டனர். இதில் சட்டத்திற்கு புறம்பாக குடிநீர் இணைப்பில் பயன்படுத்திய தச்சைநல்லூர் மண்டலம் வார்டு 11, 12, 14 பரணிநகர், வஉசி தெரு, தேனீர்குளம் ஆகிய பகுதிகளில் உதவி ஆணையாளர் (பொ) லெனின் தலைமையில் 12 மின்மோட்டார்களும், திருநெல்வேலி மண்டலம் வார்டு 19 பேட்டை பகுதியில் உதவி ஆணையாளர் (பொ) பைஜூ தலைமையில் 10 மின் மோட்டார்களும், பாளையங்கோட்டை மண்டலம் வார்டு 35 அருணகிரிநாதர் தெரு பகுதி வீடுகளில் உதவி செயற்பொறியாளர் சாந்தி தலைமையில் 10 மின்மோட்டார்களும்,. மேலப்பாளையம் மண்டலம் வார்டு 52 பகுதி 3 மற்றும் 4வது தெரு, ராஜா நகர் பகுதி வீடுகளில் உதவி செயற்பொறியாளர் ராமசாமி தலைமையில் 4 மின்மோட்டார்களும், ஆக மொத்தம் 36 மின்மோட்டார்களை மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இது குறித்து மாநகராட்சி ஆணையாளர் விஷ்ணுசந்திரன் திருநெல்வேலி மாநகராட்சி பகுதிகளில் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் சட்டத்திற்கு புறம்பாக குடிநீர் உறுஞ்சுவது தண்டனைக்குரிய குற்றமாகும், மின்மோட்டார் வைத்து குடிநீர் உறுஞ்சுவதால் அப்பகுதி மக்களுக்கு சீரான குடிநீர் வழங்க இயலாத நிலை ஏற்படுகிறது. தொடர்ச்சியாக மின்மோட்டார் வைத்து குடிநீர் உறிஞ்சினால் வீட்டு உரிமையாளர்களிடத்தில் இருந்து மோட்டார்கள் பறிமுதல் செய்வதுடன், அபராதம் விதிக்கப்படும். குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்படுவதுடன் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். மாநகராட்சி அதிகாரிகளின் ஆய்வு பணியானது தினமும் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.
இந்த ஆய்வின் போது உதவி பொறியாளர்கள், பட்டுராஜன், சிவசுப்பிரமணியன், அருள், நாகராஜன் மற்றும் இளநிலை பொறியாளர்கள் முருகன், ஐயப்பன், ஜெயகணபதி, தன்ராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.