வீட்டில் பதுக்கியிருந்த பல கோடி மதிப்பு ஐம்பொன் சிலை நெல்லையில் மீட்பு

நெல்லையில் 30 ஆண்டுகளாக வீட்டில் மறைத்து வைத்திருந்த ஐம்பொன் அம்மன் சிலையை சிலை தடுப்பு பிரிவு போலீசார் மீட்டனர்.

Update: 2021-08-02 12:49 GMT

நெல்லையில் மீட்கப்பட்ட ஐம்பொன் சிலை.

நெல்லையில் பல கோடி மதிப்புள்ள 18ம் நூற்றாண்டை சேர்ந்த ஐம்பொன் சிலை மீட்பு. 30 ஆண்டுகளாக சிலையை வீட்டிற்குள் பதுக்கி வைத்திருந்தது எப்படி என்பது குறித்து சிலை திருட்டு தடுப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நெல்லை டவுன் சாலியர் தெருவில் உள்ள வீடு ஒன்றில் பழமையான ஐம்பொன் சிலை இருப்பதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நெல்லை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஏஎஸ்பி மலைச்சாமி, இன்ஸ்பெக்டர் இளங்கோ ஆகியோர் அடங்கிய போலீஸ் குழுவினர் அங்கு விரைந்தனர்.

அவர்கள், டவுன் சாலியர் தெருவில் உள்ள கோவிந்தன்(74) என்பவருடைய வீட்டில் சோதனையிட்டபோது பூஜை அறையில் இருந்த ஐம்பொன்னாலான அம்மன் சிலையை மீட்டனர். பின்னர் கண்டியபேரி கிராம நிர்வாக அலுவலர் மகராஜன் முன்னிலையில் சிலையை கோவிந்தன் போலீசாரிடம் ஒப்படைத்தார்.

சிலையை மீட்ட போலீசார் அங்கிருந்து நெல்லை சந்திப்பு காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள். பறிமுதல் செய்யப்பட்ட ஐம்பொன் சிலை 2 அடி உயரம் 11 கிலோ எடை கொண்டதாகும். மேலும் இந்த சிலை 18ம் நூற்றாண்டை சேர்ந்தது என்றும் கூறப்படுகிறது.

எனவே இதன் மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கலாம் என கூறப்படுகிறது. அதேசமயம் வரலாற்று ஆய்வாளர்களும், சிலை மதிப்பிட்டாளர்களும் வந்து பார்த்த பிறகு தான் சிலையின் உண்மையான மதிப்பை கூறமுடியும் என்று போலீசார் தெரிவித்தனர்.

இதற்கிடையில், இந்த சிலை எப்படி கோவிந்தனுக்கு கிடைத்தது என்பது குறித்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் 1990-ம் ஆண்டு இந்த சிலையை தன்னுடைய அக்கா மாப்பிள்ளை தன்னிடம் கொடுத்ததாகவும் வேறு எதுவும் தெரியாது என்றும் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நெல்லையில் 18-ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஐம்பொன்னாலான அம்மன் சிலையை மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News