தொடர் மழையின் காரணமாக தாமிரபரணி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு
நெல்லை மாவட்டத்தில் தொடர்ந்து ஐந்து நாட்களாக பெய்து வரும் மழையின் காரணமாக தாமிரபரணி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மற்றும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகம் முழுவதும் மழை பெய்து வருகிறது. குறிப்பாக 10 மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. நெல்லையில் தொடர்ந்து 5 நாட்களாக மழை பெய்து வருவதால் அணைகளின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து உள்ளது. இந்நிலையில் இன்று தாமிரபரணி ஆற்றில் தொடர் மழையின் காரணமாக நீர்வரத்து அதிகரித்து வருகிறது. அதிகபட்சமாக பாளையங்கோட்டையில் 55 மில்லி மீட்டர் மழை பொழிந்து உள்ளது. ஏற்கனவே மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் தாமிரபரணி கரையோரம் உள்ள மக்களுக்கு தொடர் மழையின் காரணமாக தாமிரபரணி ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்கும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. வெள்ள அபாயத்தை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுத்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.