நெல்லையில் வெள்ள பாதிப்பு: தயார் நிலையில் மாநில பேரிடர் மீட்பு குழுவினர்

மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் வெள்ளத்தால் பாதிப்பு ஏற்படும் பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Update: 2021-11-14 11:14 GMT

நெல்லை மாநகர காவல் துணை ஆணையாளர் சுரேஷ்குமார் செய்தியாளர்களிடம் பேசினார்.

நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், மாநில பேரிடர் மீட்பு படையினர் பாதிப்பு ஏற்படுவதாக கண்டறியப்பட்ட பகுதிகளுக்கு வரவழைக்கப்பட்டனர்.

நெல்லை, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் அதிக மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. நெல்லை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்து வந்ததன் எதிரொலியாக மாவட்டத்தின் பிரதான அணையான பாபநாசம், சேர்வலாறு அணைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதன் காரணமாக தாமிரபரணி ஆற்றில் அணையில் இருந்து 10 ஆயிரம் கன அடி நீர் உபரிநீராக வெளியேற்றப்பட்டு வருகிறது. இது தவிர தென்காசி மாவட்டம் கடனா நதியில் இருந்து ஆயிரம் கன அடி நீரும் தாமிரபரணி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருவதால் தாமிரபரணி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேபோல ராதாபுரம், வள்ளியூர் உள்ளிட்ட பகுதியிலும் தொடர் மழை பெய்து வருவதால் அதன் சுற்றுவட்டார பகுதியில் அமைந்துள்ள கொடுமுடியாறு முழு கொள்ளளவை எட்டி அணைக்கு வரும் 1500 கனஅடி நீர் உபரி நீராக வெளியேற்றப்படுவதால் நம்பியாரின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து ஒரு சில இடங்களில் மழை பெய்து வருவதால் பாதிப்புகள் ஏற்படாத வண்ணம் இருக்க மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

நெல்லை மாநகர காவல் துறையில் மாநில பேரிடர் சிறப்பு பயிற்சி பெற்ற 44 காவல்துறையினர் உட்பட 100 பேர் கொண்ட மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் வெள்ளத்தால் பாதிப்பு ஏற்படும் பகுதிகளாக கண்டறியப்பட்ட இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மாநில பேரிடர் மீட்புப் படையினரிடம் வெள்ள பாதிப்பு பகுதிகளில் சிக்கியுள்ளவர்களை மீட்பதற்கு தேவையான லைப் ஜாக்கெட் மிதவைகள், படகுகள் உள்ளிட்டவைகளும் மரம் முறிவு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டால் அதனை அப்புறப்படுத்துவதற்கு தேவையான மர அரவை இயந்திரம் உள்ளிட்ட பொருட்களும் தயார் நிலையில் கொண்டு சென்றுள்ளனர். இதேபோல மாவட்ட காவல் துறையில் சிறப்புப் பயிற்சி பெற்ற 126 பேரிடர் மீட்பு படையினர் உட்பட மாவட்ட காவல் துறையினரும் வெள்ள பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வெள்ள பாதிப்பு பகுதிகளுக்கு செல்லும் மாநகர காவல் துறையில் பயிற்சி பெற்ற மாநில பேரிடர் மீட்புப் படையினரின் தயார் நிலை குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து மாநகர காவல் துணை ஆணையாளர் சுரேஷ்குமார் மாநகரப் பகுதிகளில் வெள்ள பாதிப்பு ஏற்படும் இடங்களாக 17 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும், ஏற்கனவே காவல்துறையினர் ரோந்து வாகனங்களில் பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் எனவும் தெரிவித்தார். ஒலிபெருக்கி மூலம் தொடர்ந்து வெள்ள பாதிப்பு மற்றும் தண்ணீரின் அளவு குறித்து எச்சரிக்கை கொடுக்கப்பட்டு வருகிறது. எனவும் நெல்லை மாநகர காவல் துறையில் சிறப்பு பயிற்சி பேரிடர் மீட்பு படையினர் உட்பட காவல் துறையினர் இணைந்து 100க்கும் மேற்பட்டோர் பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். எந்த நேரத்தில் எந்த பாதிப்பு ஏற்பட்டாலும் உடனடியாக மீட்புப் பணிகளை மேற்கொள்ள அனைத்து உபகரணங்களும் தயார் நிலையில் வைத்து இருப்பதாகவும் தெரிவித்தார்.

Tags:    

Similar News