குறைந்த அளவு ரசிகர்கள், அதிக அளவு கட்சியினர்: அமர்க்களமாக வெளியான "நெஞ்சுக்குநீதி"
உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியாகியுள்ள நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தின் வெளியீட்டை நெல்லை மாவட்ட திமுகவினர் மேளதாளத்துடன் உற்சாகமாக கொண்டாடினர்.
உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியாகியுள்ள நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தின் வெளியீட்டை நெல்லை மாவட்ட திமுகவினர் மேளதாளத்துடன் உற்சாகமாக கொண்டாடினர். மாவட்டச்செயலாளர், மேயர், துணை மேயர், யூனியன் சேர்மன் என திமுக பட்டாளமே திரையரங்கிற்கு நேரில் வந்து நெஞ்சுக்கு நீதி படத்தை பார்த்தனர்.
திமுக சட்டமன்ற உறுப்பினரும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள நெஞ்சுக்கு நீதி திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது. தமிழகம் முழுதும் இத்திரைப்படத்தின் வெளியீட்டை திமுகவினர் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் நெல்லையில் நெல்லை சந்திப்பு ராம் தியேட்டரில் உதயநிதி ஸ்டாலினின் நெஞ்சுக்கு நீதி திரைப்படம் நேற்று வெளியானது. இதையொட்டி திரையரங்கை சுற்றிலும் திமுகவினர் படத்தின் வெளியீட்டை வரவேற்று பிளக்ஸ் பேனர்கள் வைத்திருந்தனர்.
பேனர்களில் தமிழக சபாநாயகர் அப்பாவு, கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியம் ஆகியோரின் படங்கள் இடம் பெற்றிருந்தது. ரசிகர்களுடன் இணைந்து திமுகவினரும் இந்த படத்தை ஆர்வமாக பார்த்து ரசித்தனர். திமுக நெல்லை மத்திய மாவட்ட செயலாளரும், பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினருமான அப்துல் வகாப், நெல்லை மாநகராட்சி மேயர் சரவணன், துணை மேயர் ராஜு, பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றிய தலைவர் என பல முக்கிய நிர்வாகிகளும் ராம் தியேட்டரில் அமர்ந்து நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தை பார்த்தனர்.
பின்னர் மாவட்ட செயலாளர் அப்துல் வகால் திரையரங்கில் இருந்த ரசிகர்கள் மற்றும் கட்சியினருக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினார். முன்னதாக மாவட்ட செயலாளருக்கு செண்டை மேளம் முழங்க பட்டாசுகள் வெடித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. திரைப்படம் வெளியான முதல்நாள் என்ற போதிலும், நெல்லை ராம் தியேட்டரில் குறைந்த அளவு என ரசிகர்களே படம் பார்க்க வந்திருந்தனர். இருப்பினும் தேர்தலுக்கு பிறகு உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான முதல் படம் என்பதால் திமுகவினர் இப்படத்தை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.