'தமிழகத்தில், பாஜக ஆட்சி என்பது நடக்காது' - பீட்டர் அல்போன்ஸ் ஆரூடம்

BJP Latest News -மதக்கலவரம் நடந்த இடங்களில் பாஜக ஆட்சி என்பது, அது தமிழகத்தில் நடக்காது என, சிறுபான்மை ஆணையத்தலைவர் பீட்டர் அல்போன்ஸ் தெரிவித்தார்.

Update: 2022-11-04 04:42 GMT

சிறுபான்மை ஆணையத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ்.

BJP Latest News -நாட்டில் எங்கெல்லாம் மதக்கலவரம் நடந்து முடிந்ததோ, அங்கெல்லாம் பாஜக தான் ஆட்சிக்கு வந்துள்ளது. ஆனால் அது தமிழகத்தில் நடக்காது என்று சிறுபான்மையினர் நல ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் தெரிவித்துள்ளார்.

கோவை சிலிண்டர் வெடிப்பு விவகாரத்தில், தமிழக அரசு நடவடிக்கை போதவில்லை, மெத்தன போக்குடன் செயல்பட்டதாக பாஜக மற்றும் ஆளுநர் ஆர்.என் ரவி ஆகியோர் குற்றம்சாட்டினர். ஆளுநரின் நேரடி குற்றச்சாட்டுக்கு திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் நேரடியாக கண்டனம் தெரிவித்ததோடு, ஆளுநரை திரும்பப் பெறக்கோரி, குடியரசுத் தலைவரிடம் கடிதம் அளிக்கவும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்

இந்நிலையில், நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்து தமிழ்நாடு சிறுபான்மையினர் நல ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் ஆளுநர் விவகாரம், பாஜகவின் செயல்பாடுகள் குறித்து விரிவாக கருத்து தெரிவித்தார்.

இதுகுறித்து பீட்டர் அல்போன்ஸ் கூறியதாவது;

நெல்லை மாவட்டத்தில் மட்டும், சிறுபான்மையின மாணவர்களுக்கு ரூ.7.11 கோடி கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறுபான்மையின மக்களை சந்தித்து, அவர்களின் வாழ்வியல் பிரச்னைகளை சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியருடன் ஆலோசித்து சரி செய்து வருகிறோம். இதுவரை 16 மாவட்டங்களை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளோம்.

சிறுபான்மை மக்களை அச்சுறுத்தும் வகையில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேசி வருகிறார். இது அவரின் பதவிக்கு ஒவ்வாத செயல். தமிழக அரசுக்கு எதிராக ஆளுநரின் செயல்பாடுகள் பொருளாதார மற்றும் சமூக முன்னேற்றத்தை வெகுவாக பாதிக்கும். அண்ணாமலை, ஆளுநர் இருவரும், தமிழகத்தை வன்முறை களமாக மாற்றவும், வெறுப்பு அரசியலை செய்யவும் முயற்சிக்கிறார்கள். இதுபோன்ற தவறுகளை நிச்சயம் தவிர்க்க வேண்டும். இவர்களது பேச்சு, சமூகத்தில் தேவையற்ற பிரச்னைகளை ஏற்படுத்துகிறது. மக்கள் மத்தியில், தேவையற்ற குழப்பத்தை, பீதியை உருவாக்க வாய்ப்புள்ளது.

மத்திய அரசு பின்னால் இருந்து இந்த வேலைகளை செய்கிறதோ என்ற எண்ணம் தோன்றுகிறது. கேரளா, தமிழக அரசுக்கு எதிராக செயல்படும் ஆளுநர்கள் தங்களின் செயல்பாடுகளை கைவிட வேண்டும். எங்கெல்லாம் மதக்கலவரம் நடந்து முடிந்ததோ, அங்கெல்லாம் பாஜக தான் ஆட்சிக்கு வந்துள்ளது. அது தமிழகத்தில் நடக்காது.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து, 50 ஆண்டுகளாக இருக்கும் இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்காமல் இருப்பது மிகப்பெரிய அவமானம். இடஒதுக்கீடு என்பது அனைத்து சமூக மக்களுக்கும் கிடைக்கும் வகையில் இருக்க வேண்டும். பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு மத்திய அரசு இட ஒதுக்கீடு அளிப்பது மிகப்பெரிய சமூக அநீதி என்றும் அவர் தெரிவித்தார்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2 

Tags:    

Similar News