கல் குவாரி விபத்தில் 30 மணி நேர மீட்புப் பணிக்கு பின் 5 வது நபர் சடலமாக மீட்பு

அடை மிதிப்பான் குளம் கல்குவாரி விபத்தில் பாறை இடிபாடுகளில் சிக்கியவர் நீண்ட போராட்டத்துக்குப் பின் சடலமாக மீட்பு

Update: 2022-05-18 16:30 GMT

திருநெல்வேலி கல்குவாரி விபத்தில் தேடப்பட்டு வந்த ஐந்தாவது நபர் சடலமாக மீட்கப்பட்டார்

திருநெல்வேலி கல்குவாரி விபத்தில் தேடப்பட்டு வந்த ஐந்தாவது நபர் இருக்குமிடம் கண்டறியப்பட்டு, மீட்க தடையாக இருந்த பாறையை வெடி வைத்து தகர்க்கப்பட்டு மொத்தமாக முப்பது மணி நேர தீவிர மீட்பு பணிக்கு பின் சடலமாக மீட்கப்பட்டார்.

திருநெல்வேலி மாவட்டம் பொன்னாக்குடி அருகே உள்ள அடைமிதிப்பான்குளம் குவாரியில் கடந்த 14 ம்தேதி சனிக்கிழமை இரவில் திடீர் பாறைச்சரிவு ஏற்பட்டது. இதில் ஆறு தொழிலாளர்கள் கல்குவாரிக்குள் சிக்கி கொண்ட நிலையில், மறுநாள் 15 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை ஹிட்டாச்சி ஆபரேட்டர்கள் முருகன், விஜய் இருவர் உயிருடன் மீட்கப்பட்டனர். மாலையில் மூன்றாவதாக ஆப்பரேட்டர் செல்வம் மீட்கப்பட்டார். ஆனால் அவர் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

இரண்டாம் நாள்,16 ம் தேதி திங்கட்கிழமை காலையில் தேசிய பேரிடர் மீட்பு படையினர், தேடத் தொடங்கிய நிலையில், நீண்ட நேர தேடுதலுக்கு பின் இரவில் ( லாரி கிளீனர் ) முருகனை சடலமாக மீட்டனர். இதனால் கல்குவாரி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2ஆக உயர்ந்தது.

தொடர்ந்து 17 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மதியம் ஐந்தாவது நபரின் உடல், பாறை குவியலுக்குள் இருக்கும் இடம் அடையாளம் காணப்பட்டது. ஆனால் பாறைகளுக்கு இடையில் அவரது உடல் சிக்கி இருந்ததாலும், இரவில் மீட்புப் பணியின் போது மீண்டும் சிறிய அளவில் பாறை சரிவு நிகழ்ந்ததால், மூன்றாம் நாள் மீட்புப்பணிகள் நள்ளிரவில் கைவிடப்பட்டது.

இந்த நிலையில் 18 ம் தேதி, இன்று நான்காவது நாள் மீட்பு பணி காலை 11.30 மணிக்கு மேல்தான் துவங்கியது. சுரங்கத் துறை வல்லுநர்கள் உடன் பேரிடர் மீட்பு படையினருடன் ஆலோசனை செய்த நிலையில் பாறையில் துளையிட்டு வெடி மருந்துகளை வைத்து தகர்த்து உடலை எடுக்க முடிவு செய்யப்பட்டது. இதனையடுத்து 20 ஜெலட்டின் குச்சிகள் கொண்டு வரப்பட்டது. மேலும் பாறையில் துளையிடும் இயந்திரம் மூலம் துளையிடப்பட்டு 10 ஜெலெட்டின் குச்சி வெடிமருந்துகள் செலுத்தப்பட்டது. மீட்பு பணிகளில் ஈடுபடும் நபர்கள் பாதுகாப்பான இடங்களில் ஒதுங்கி கொள்ள மதியம் 3.20 மணி அளவில் பாறை பெரும் சத்தத்துடன் தகர்க்கப்பட்டது.

இதனையடுத்து நொறுங்கிய பாறைகளை அகற்றி மாலை 6.45 மணிக்கு 5 வது நபர் சடலமாக மீட்கப்பட்டார். மீட்கப்பட்ட நபரின் உடையில் இருந்து எடுக்கப்பட்ட ஓட்டுனர் உரிமம், மணிபார்ஸ், அவர் அணிந்திருந்த உடை இவற்றை கொண்டு உறவினர்கள் சடலமாக மீட்கப்பட்டவர் செல்வகுமார் என உறுதி செய்தனர். மேலும் செல்வகுமாரின் சகோதரர் மாதவனும், மீட்கப்பட்ட சடலம் தன் சகோதரர் தான் என உறுதி செய்தார்.

இதனைத் தொடர்ந்து மீட்கப்பட்ட செல்வகுமாரின் உடல் திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக கொண்டு செல்லப்பட்டது. கல்குவாரியில் சிக்கி இருக்கும் ஆறாவது நபர் ராஜேந்திரனை, மீட்கும் பணி நாளை காலை தொடங்கும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.

Tags:    

Similar News