நெல்லையப்பர் கோவிலில் இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு

தமிழக கோவில்களின் சொத்துக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே தமிழக அரசின் நோக்கம் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

Update: 2021-07-07 10:13 GMT

தமிழக கோவில்களின் சொத்துக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே தமிழக அரசின் நோக்கம் என்றார் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு.

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள தொன்மையான கோவில்களை அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறார். அதன் தொடர்ச்சியாக திருநெல்வேலிக்கு வந்த அவர் தென் தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற சிவாலயமான நெல்லையப்பர்-காந்திமதியம்மன் திருக்கோவிலில் ஆய்வு மேற்கொண்டார். கோவிலில் சுவாமி சந்நிதி அம்பாள் சந்நிதி , வசந்த மண்டபம் , கோவில் உட்பிரகாரம் , தெப்பக்குளம் ஆகியவற்றை பார்வையிட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் பி.கே. சேகர்பாபு மேலும் கூறியதாவது: தமிழகம் முழுவதும் உள்ள மிக தொன்மையான கோவில்களை துறை ரீதியாக ஆய்வு செய்து வருகிறேன். இதுவரை 50 கோவில்களில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. நெல்லையப்பர் கோவிலில் பல்வேறு திருப்பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

நெல்லையப்பர் கோவிலில் சிதலமடைந்து திருப்பணிகள் நடக்க இருக்கும் மண்டபத்தில் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள தொல்லியல் துறையிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது. இங்குள்ள கருமாரி தெப்பம் முழுமையாக சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். அதுபோன்று நவக்கிரஹ சந்திரன் சிலை சிதலமடைந்துள்ளது. அதனை செப்பனிட நடவடிக்கை எடுக்கப்படுள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படும்.

நெல்லையப்பர் கோவிலில் உள்ள வெள்ளி தேர் புனரமைக்கப்பட்டு 2 ஆண்டுகளுக்குள் தேரோட்டம் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும். கோவில் யானை காந்திமதிக்கு 30 நாட்களுக்கு ஒருமுறை மருத்துவ பரிசோதனை நடத்தப்படுகிறது. இனிமேல் 15 நாட்களுக்கு ஒருமுறை பரிசோதனை நடத்தப்படும்.

சுவாமி நெல்லையப்பருக்கு நடைபெற்று வந்த மூலிகைத் தைல காப்பு நிகழ்ச்சி கடந்த சில ஆண்டுகளாக நடத்தப்படவில்லை என கூறப்படுகிறது. இந்த நிகழ்ச்சியை உடனடியாக நடத்த அறநிலையத்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

மிழகம் முழுவதும் இந்த ஆண்டு அதிகமான கோவில்களில் திருப்பணிகள் செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்படும்.. தமிழக கோவில்களின் சொத்துகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே தமிழக அரசின் நோக்கம். அறநிலையத்துறையில் கடந்த ஆட்சியில் எந்தப் பணிகளும் மேற்கொள்ளாமல் அறுவைச் சிகிச்சை செய்யும் நிலையில் உள்ளது. எனவே இனி குறிப்பிட்ட காலத்திற்குள் அனைத்துப்பணிகளும் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

இந்த ஆய்வில், இந்துசமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுபரன் , மாவட்ட ஆட்சியர் விஷ்ணு , பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல்வகாப் , முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர் ஆவுடையப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் .

Tags:    

Similar News