விபத்தில் காயம் அடைந்த தூய்மை பணியாளர்களுக்கு கவுன்சிலர்கள் ஆறுதல்

விபத்தில் காயம் அடைந்த திருச்சி மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு கவுன்சிலர்கள் ஆறுதல் கூறினார்கள்.

Update: 2022-11-24 11:48 GMT

சாலை விபத்தில் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வரும் மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு கவுன்சிலர்கள் முத்து செல்வம், சுரேஷ், பைஸ் அகமது ஆறுதல் கூறினார்கள்.

சாலை விபத்தில் காயம் அடைந்த மாநகராட்சி தூய்மை பணியாளர்களை மாமன்ற உறுப்பினர்கள் நேரில் சென்று பார்த்து ஆறுதல் கூறி உதவி செய்தனர்.

திருச்சி புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலை டி.வி.எஸ். டோல்கேட்டில் இருந்து ரிங் ரோடு வரை தமிழகத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலை துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. தற்போது இந்த சாலையை விரிவாக்கம் செய்யும் பணி நடந்து கொண்டிருக்கிறது.

இந்த சாலை தேசிய நெடுஞ்சாலைக்கு சொந்தமானது தான் என்றாலும் அதனை பராமரிக்கும் பொறுப்பு மட்டும் மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ளது.  ஜனாதிபதி, பிரதமர், கவர்னர், மாநில முதல்வர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் வரும்போது இந்த சாலையை சுத்தப்படுத்தும் பணியில் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகிறார்கள்.

அந்த வகையில் சட்டமன்ற பேரவை குழு திருச்சி மாவட்டத்தில் ஆய்வு பணிகளுக்காக வருவதையொட்டி இந்த சாலையின் நடுவில் உள்ள சென்டர் மீடியன் அருகில் குவிந்துள்ள மணலை அப்புறப்படுத்தும் பணியில் மாநகராட்சி 20வது வார்டை சேர்ந்த  மகளிர் சுய உதவி குழு தூய்மை பணியாளர்கள் ஈடுடுத்தப்பட்டு இருந்தனர்.

அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு கார் தூய்மை பணியாளர்கள் மீது மோதியது. இதில் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் செல்வி, குணசுந்தரி, மாரியப்பன் ஆகிய மூவரும் காயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தூய்மை  பணியாளர்கள் செல்வி, குணசுந்தரி, மாரியப்பன் ஆகிய மூவரையும் இன்று  திருச்சி மாநகராட்சி வரி மற்றும் நிதிக்குழு தலைவர் முத்து செல்வம் மற்றும் 23 வது வார்டு மாமன்ற உறுப்பினர் க. சுரேஷ், 28 வது வார்டு மாமன்ற உறுப்பினர் பைஸ் அகமது ஆகியோர் மருத்துவமனைக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்ட தொழிலாளர்களை சந்தித்து ஆறுதல் கூறி உதவியும் செய்தனர். அவர்களுடன் மருத்துவமனை கண்காணிப்பாளர்  அருண்ராஜ் அவர்கள் உடனிருந்தார். தேவையான சிகிச்சைகள் சிறப்பாக செய்யப்படும் என்பதையும் உறுதியளித்தார்.

திருச்சி- புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையை தூய்மை படுத்தும் பணியில் மாநகராட்சி தூய்மை பணியாளர்களை ஈடுபடுத்தியது தவறு. அப்படியே பயன்படுத்தி இருந்தாலும் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்த பின்னரே அவர்களை அந்த பணியை செய்ய வைத்திருக்கவேண்டும்.ஆனால் மாநகராட்சி நிர்வாகம் பொறுப்பற்ற வகையில் செயல்பட்டு அப்பாவி தொழிலாளர்களின் உயிருடன் விளையாடி உள்ளது. இதற்கு காரணமான அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவேண்டும். எதிர்காலத்தில் இதுபோன்ற ஆபத்தான பணிகளில் மாநகராட்சி தூய்மை பணியாளர்களை ஈடுபடுத்தக்கூடாது. நகரில் உள்ள தெருக்களில் குப்பை கூளங்களை அள்ளுவதற்கும், துப்புரவு பணி செய்வதற்குமே ஆள் பற்றாக்குறை நிலவி வருகிற நேரத்தில் இதுபோன்ற அயல்பணிகளுக்கு அவர்களை அனுப்பியது தவறான முன்னுதாரணமாகும் என சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

Tags:    

Similar News