திருச்சி ஜேகே நகர் விரிவாக்க பகுதியில் விடைபெற்ற மின்மினி பூச்சி மின் விளக்குகள்

திருச்சி ஜேகே நகர் விரிவாக்க பகுதியில் விடைபெற்ற மின்மினி பூச்சி போல் மின்னிய மின் விளக்குகள் மாற்றப்பட்டு உள்ளன.

Update: 2024-04-30 11:42 GMT

திருச்சி ஜேகேநகர் விரிவாக்க பகுதியில் மாற்றப்படும் மின் விளக்குகள்.

திருச்சி மாநகராட்சி நான்காவது மண்டலம் 61 வது வார்டில் உள்ளது ஜேகே நகர் மற்றும் ஜேகே நகர் விரிவாக்க பகுதிகள். ஜே.கே. நகர் விரிவாக்க பகுதியில் உள்ள அனைத்து தெருக்களிலும் உள்ள மின் கம்பங்களில் பொருத்தப்பட்டுள்ள மின்விளக்குகள் 20 வாட்ஸ் அளவில் மட்டுமே இருப்பதால் அவை இரவில் மின்மினி பூச்சிகள் போல மின்னிக் கொண்டிருந்தன.

இப்பகுதி நகரின்  விரிவாக்க பகுதி என்பதால் இன்னும் பல காலி பிளாட்டுகள் காலி பிளாட்டுக்களில் புதர் மண்டி கிடக்கும் முற்புதர்கள் என ஏராளமான பிரச்சனைகள் உள்ளன. முட்புதர்களில்  இருந்து பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துகள் அடிக்கடி  சாலைகளை கடந்து செல்வதும், வீடுகளுக்குள் புகுந்து விடுவதும் இங்கு சர்வ சாதாரணமான ஒரு நிலை ஆகும். எனவே இரவு நேரங்களில் மக்கள் அச்சமின்றி தைரியமுடன் நடமாடுவதற்காக மின்மினி போல் எரியும் மின் விளக்குகளை மாற்றி விட்டு அதிக எரிசக்தி திறன் கொண்ட மின்விளக்குகள் மாற்ற வேண்டும் எனக் கூறி ஜேகே நகர் விரிவாக்க பகுதி மக்கள் நலம் சங்கம் சார்பில் மாநகராட்சி மேயர் அன்பழகனிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.

இந்த கோரிக்கையை ஏற்ற மாநகராட்சி மேயர் அன்பழகன் தேவையான இடங்களில் 10 புதிய அதிக எரிசக்தி திறன் கொண்ட மின்  விளக்குகள் மாற்றிக் கொடுப்பதற்கு உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து மாநகராட்சி மின் விளக்குகள் பராமரிப்பு பிரிவு அதிகாரி அண்ணாமலை, 61வது வார்டு கவுன்சிலர் ஜாபர் அலி ஆகியோர் ஜேகே நகர் விரிவாக்க பகுதிக்கு வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இதனை தொடர்ந்து 61வது வார்டு கவுன்சிலர் ஜாபர் அலி பரிந்துரையின் அடிப்படையில் தற்போது முக்கிய சாலை சந்திப்புகளில் உள்ள பத்து  வாட்ஸ் மின் விளக்குகளை அகற்றிவிட்டு அதற்கு பதிலாக  40 வாட்ஸ் மின்விளக்குகள் பொருத்துவதற்கு மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. முதல் கட்டமாக இன்று ஐந்து மின் விளக்குகள் மாற்றம் செய்யப்பட்டது. தொடர்ந்து நாளை மறுநாள் மற்ற மின் விளக்குகளும் மாற்றம்  செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோரிக்கையை ஏற்று உடனடியாக  நிறைவேற்றிய திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் மற்றும் 61வது வார்டு கவுன்சிலர் ஜாபர் அலி ஆகியோருக்கு  ஜேகே நகர் விரிவாக்க பகுதி மக்கள் நலச் சங்கம் மற்றும் இங்கு குடியிருந்து வரும்  மக்கள் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News