பேராசிரியரிடம் லஞ்சம் வாங்கிய வழக்கில் உதவியாளருக்கு சிறைத்தண்டனை

பேராசிரியரிடம் லஞ்சம் வாங்கிய வழக்கில் உதவியாளருக்கு 3 ச வருடம் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு அளிக்கப்பட்டது.

Update: 2023-03-17 16:32 GMT

பேராசிரியரிடம் ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கல்லூரி கல்வி இணை இயக்குனர் அலுவலக உதவியாளருக்கு திருச்சி கோர்ட்டு சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு கூறி உள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் பூண்டியில் உள்ள வீரய்யா வாண்டையார் நினைவு புஷ்பம் கல்லூரியில் (தன்னாட்சி) இயற்பியல் துறையில் பேராசிரியராக பணியாற்றி வந்தவர் முனைவர் சக்திவேல். இவருக்கு பதவி உயர்வு பெற்றதற்கான 19  மாத கால சம்பள நிலுவை தொகை பெறுவதற்காக திருச்சியில் உள்ள கல்லூரி கல்வி இணை இயக்குனர் அலுவலக உதவியாளர் வேணுகோபால் என்பவரை கடந்த 2012ம் ஆண்டு அணுகினார்.

அப்போது வேணுகோபால் இதற்கு ரூ.2 ஆயிரம் லஞ்சம் தந்தால்தான் நிலுவை தொகை வழங்குவதற்கான பணியை செய்ய முடியும் என்றார். லஞ்சம் கொடுக்க விரும்பாத முனைவர் சக்திவேல் இதுபற்றி திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீஸ் அலுவலகத்தில் புகார் செய்தார். இந்த புகாரின் அடிப்படையில் திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீஸ் ஆய்வாளர் சக்திவேல் வழக்குப்பதிவு செய்தார்.

போலீசார் செய்த ஏற்பாட்டின்படி கடந்த 19-1-2012 அன்று வேணுகோபால் சக்திவேலிடம் ரூ.2 ஆயிரம் லஞ்ச பணத்தை வாங்கியபோது மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸ் படையினர் கையும் களவுமாக பிடித்து வேணுகோபாலை கைது செய்தனர்.

இது தொடர்பான வழக்கு திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் விசாரணை முடிந்து இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. 

வேணுகோபால் மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 3 ஆண்டு கடுங்காவல் சிறைத்தண்டனையும், ரூ.20ஆயிரம் அபராதமும் அபராதம் கட்டத்தவறினால் மேலும் 6 மாதம் சிறைத்தண்டனையும் விதித்து நீதிபதி கார்த்திகேயன் தீர்ப்பு அளித்தார். இந்த வழக்கினை லஞ்ச ஒழிப்பு போலீஸ் ஆய்வாளர் சக்திவேல் சிறப்பாக நடத்தினார். போலீசார் தரப்பில் அரசு வழக்கறிஞர் சுரேஷ்குமார் ஆஜர் ஆகி வாதாடினார்.

Tags:    

Similar News