போராட்டத்தை கண்டதும் திரும்பிச்சென்ற ஆட்சியர்: பொதுமக்கள் ஆத்திரம்

மாவட்ட ஆட்சியர் போராட்டத்தை கண்டதும் வாகனத்தை திருப்பிக் கொண்டு சென்றதால் பொதுமக்கள் ஆத்திரமடைந்தனர்.

Update: 2023-10-29 02:20 GMT

கிராம மக்களை பார்த்ததும் மாவட்ட ஆட்சியர் வாகனம் திரும்பும்போது எடுத்த படம்.

தென்காசி மாவட்டம், இலஞ்சி அருகே அரசு பேருந்து நிற்கவில்லை என பேருந்தை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் - அவ்வழியாக வந்த மாவட்ட ஆட்சித் தலைவர் போராட்டத்தை கண்டதும் வாகனத்தை திருப்பிக் கொண்டு சென்றதால் பொதுமக்கள் ஆத்திரம்.

தென்காசி மாவட்டம், குற்றாலம் அருகே உள்ள இலஞ்சி பேரூராட்சி பகுதிக்கு உட்பட்ட வள்ளியூர் என்கின்ற பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வரும் நிலையில், இந்த வழியாக செல்லும் பேருந்துகள் ஏதும் வள்ளியூர் பகுதியில் நிற்காமல் சென்று வந்துள்ளது.

இதனால், அப்பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள் நீண்ட தூரம் நடந்து சென்று பேருந்து ஏற வேண்டிய சூழல் நிலவி வந்த நிலையில், இது தொடர்பாக அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பலமுறை புகார் கொடுத்ததாக கூறப்படுகிறது.

இருந்தபோதும், போக்குவரத்து துறை அதிகாரிகள் வள்ளியூர் பகுதியில் பேருந்தை நிறுத்தி செல்ல எந்த விதமான நடவடிக்கையும் எடுக்காத நிலையில், ஆத்திரமடைந்த அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தெற்குமேடு பகுதியில் இருந்து தென்காசி நோக்கி சென்ற (வழித்தட எண் :31 பி) என்ற அரசு பேருந்தையும், அதை வழித்தடத்தில் மறுமார்க்கமாக வந்து கொண்டிருந்த மற்றொரு அரசு பேருந்தையும் சிறை பிடித்து சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அந்த பகுதியில் சிறிது போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்ட நிலையில், அந்த வழியாக மாவட்ட ஆட்சித் தலைவர் துரை.ரவிச்சந்திரன் தனது வீட்டிலிருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி சென்று கொண்டிருந்த போது, பொதுமக்கள் நடத்திய இந்த சாலை மறியலால் மாவட்ட ஆட்சித் தலைவரின் வாகனமும் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்டது.

அதனைத்தொடர்ந்து, தனது பாதுகாவலர் மூலம் பிரச்சினையை தெரிந்து கொண்ட மாவட்ட ஆட்சித் தலைவர் பிரச்சனையை தீர்த்து வைக்க நடவடிக்கை எடுக்காமல் காரை திருப்பிக் கொண்டு வேறு வழியில் சென்ற சம்பவம் அங்கிருந்த பொது மக்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

மேலும், பிரச்சினைகளை தீர்த்து வைக்க வேண்டிய மாவட்ட ஆட்சித் தலைவர் கண்டுகொள்ளாமல் செல்வது வேதனை தரும் செயலாக உள்ளது என அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வேதனை தெரிவித்த நிலையில், அங்கு வந்த குற்றாலம் போலீசார் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை சமாதானம் செய்து சிறை பிடிக்கப்பட்ட போக்குவரத்தை அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

Tags:    

Similar News