தென்காசியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்.. 6 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்...

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தின்போது 6 பேருக்கு நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் ஆகாஷ் வழங்கினார்.

Update: 2023-01-02 13:20 GMT

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் வழங்கினார்.

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுவது வழக்கம். அதன்படி, இன்று (02.01.2023) மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை ஆட்சியர் ஆகாஷ் பெற்றுக் கொண்டார்.

கூட்டத்தின்போது, மாற்றுத் திறனாளிகள் நல துறையின் சார்பில் உதவி உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் 4 மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வண்டிகள் ரூ. 48,000 மதிப்பிலும், 2 மாற்றுத்திறனாளிகளுக்கு காதொலி கருவிகள் ரூ. 17,000 என மொத்தம் 6 பேருக்கு ரூ. 65,000 மதிப்பில் உதவி உபகரணங்களை மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் வழங்கினார்.

மேலும், கூட்டத்தின்போது, இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரக் கோருதல், பட்டாமாறுதல், மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை மற்றும் இதர மனுக்கள் என மொத்தம் 371 மனுக்கள் பெறப்பட்டன. இந்தக்கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் தகுதி வாய்ந்த மனுக்களாக உள்ளதா என்பதை விசாரணை செய்து விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரர்களுக்கு உரிய பதில் அளிக்குமாறு சம்பந்தப்பட்ட அனைத்துத்துறை அலுவலர்களுக்கும் மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் அறிவுறுத்தினார்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் பத்மாவதி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) முத்துமாதவன், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆலவலர் கந்தசாமி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சங்கர நாராயணன், மாவட்ட வழங்கல் அலுவலர் சுதா, உதவி ஆணையர் (கலால்) ராஜமனோகரன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜெயப்பிரகாஷ் உட்பட அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News