நெல்லை, தென்காசி மாவட்டங்களுக்கு பங்குனி உத்திரம் உள்ளூர் விடுமுறை

பங்குனி உத்திரம் தினமான வரும் ஏப்ரல் 5ம் தேதி, நெல்லை, தென்காசி மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Update: 2023-03-24 06:53 GMT

தென்காசி மாவட்ட ஆட்சியர் துரை ரவிச்சந்திரன் (கோப்பு படம்)

பங்குனி உத்திர திருநாள் வரும் ஏப்ரல் 5 ம் தேதி (புதன்கிழமை) அன்று கொண்டாடப்பட உள்ளதை முன்னிட்டு தென்காசி மற்றும் நெல்லை மாவட்டம் முழுவதும் அனைத்து பள்ளி, கல்லுாரிகளில் நடைபெற்று வரும் பொதுத் தேர்வுகள் மற்றும் முக்கியத் தேர்வுகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில், அனைத்து மாநில அரசு அலுவலகங்களுக்கும், நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை என தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் துரை. ரவிச்சந்திரன் மற்றும் நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர் கார்த்திகேயன் ஆகியோர் தகவல் தெரிவித்துள்ளனர்.

பங்குனி உத்திர திருநாள் (பங்குனி 22) 05.04.2023 புதன்கிழமை அன்று கொண்டாடப்பட உள்ளதை முன்னிட்டு தென்காசி மற்றும் நெல்லை மாவட்டம் முழுவதும் அனைத்து பள்ளி, கல்லுாரிகளில் நடைபெற்று வரும் பொதுத் தேர்வுகள் மற்றும் முக்கியத் தேர்வுகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் அனைத்து மாநில அரசு அலுவலகங்களுக்கும் நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை (Local Holiday) நாளாக  மாவட்ட ஆட்சித் தலைவர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது.


நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் (கோப்பு படம்)

மேற்குறிப்பிட்ட நாளில் அரசு பொதுத் தேர்வுகள் ஏதுமிருப்பின் பொதுத் தேர்வு எழுதும் பள்ளி மாணவர்கள், பொதுத் தேர்வு நடைபெறும் பள்ளிகள் மற்றும் பொதுத் தேர்வு தொடர்பாக பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு இந்த உள்ளூர் விடுமுறையானது பொருந்தாது எனவும், மேற்படி 05.04.2023 உள்ளூர் விடுமுறை நாளன்று நடத்தப்படும் அரசு பொதுத் தேர்வுகள் அனைத்தும் எவ்வித மாறுதலுமின்றி நடைபெறும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

மேற்படி உள்ளூர் விடுமுறையானது செலவாணி முறிச்சட்டம் 1881 (Under Negotiable Instrument ACT-1881)-ன் கீழ் அறிவிக்கப்படவில்லை என்பதால் வங்கிகளுக்கு இவ்விடுமுறை பொருந்தாது. இரு மாவட்ட கருவூலம் மற்றும் அனைத்து சார்நிலைக் கருவூலங்களும் குறைந்தபட்ச பணியாளர்களை கொண்டு அரசு காப்புகள் (Government Securities) தொடர்பாக அவசரப் பணிகளை கவனிப்பதற்காக செயல்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. மேலே குறிப்பிடப்பட்டுள்ள உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் வகையில் 06.05.2023 முதலாவது சனிக்கிழமை அன்று வேவை நாளாக அறிவிக்கப்படுகிறது. அச்சமயம் கோடை விடுமுறையில் உள்ள கல்வி நிறுவன மாணவ மாணவியருக்கு இவ்வேலைநாள் பொருந்தாது.

இவ்வாறு நெல்லை மற்றும் தென்காசி மாவட்ட ஆட்சியர்கள் தெரிவித்துள்ளனர்.

Similar News